மிகப் பெரிய வெற்றியின் தொடக்கம் இது.. ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : 5 மாநில தேர்தல் வெற்றி, வரும் 2019ம் ஆண்டு வரவுள்ள லோக்சபா தேர்தலில் கிடைக்க உள்ள மிகப்பெரிய வெற்றிக்கு தொடக்கமாக அமையும் என்று ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, நம்முடைய மிகப்பெரிய வெற்றிக்கு இது தொடக்கமாக அமையும் என்றேன்.
பாசிச பாஜகவுக்கு எதிரான நமது போருக்கும், பிரம்மாண்டக் கூட்டணிக்கும் இந்த வெற்றி நிச்சயம் வலு சேர்க்கும். அதேபோல், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் சந்திர சேகர ராவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேசிய அளவில் வலுவான மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் திமுகவும், காங்கிரஸும் இன்ன பிற எதிர்க்கட்சிகளும் தீவிரமாக உள்ளன என்பது நினைவிருக்கலாம்.