தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் மு.க ஸ்டாலின் - 133 எம்எல்ஏக்கள் ஆதரவு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின். 133 எம்எல்ஏக்கள் கையெழுத்து அடங்கிய ஆதரவு கடிதத்தை அளித்தார்.
சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது 133 எம்எல்ஏக்களின் கையெழுத்து அடங்கிய ஆதரவு கடிதத்தையும், அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் மு.க ஸ்டாலின் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது. 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை. திமுக மட்டும் 125 இடங்களில் வென்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4, மனித நேய மக்கள் கட்சி 2 இடங்கள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 இடத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளது.
நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் இணைந்து மு.க ஸ்டாலினை சட்டசபைக்குழு தலைவராக ஏகமனதாக தேர்வு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது 133 எம்எல்ஏக்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தையும், அமைச்சரவை பட்டியலையும் மு.க ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை 7 ஆம் தேதி காலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்த பதவியேற்பு விழாவில் மொத்தம் 300 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.