கதவை மூடிய திமுக.. சிக்கலில் தேமுதிக.. குடுமி அதிமுக கையில்!
Recommended Video
சென்னை: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நடைமுறைகள் முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. இனிமேல் எந்த ஒரு கட்சிக்கும் சீட் கொடுக்க முடியாது என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ள நிலையில், திமுக தலைமையில் அக்கட்சியுடன் சேர்த்து மொத்தம் 9 கட்சிகள் கூட்டணியை அமைத்துள்ளன.
திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐக்கிய ஜனநாயக கட்சி மற்றும் மதிமுக ஆகிய ஒன்பது கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பிடித்துள்ளன.
ஆ... ராசாவுக்கு இம்புட்டு செல்வாக்கா.. இந்தா பிடிங்க நீலகிரியை.. மீண்டும் தர திமுக திட்டம்!
கூட்டணி கதவுகள்
தமிழகம், புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுவது என்றும், மற்ற 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிடுவது என்றும், தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், அறிவாலயத்தில் இன்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் கட்சியை கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், இதற்கு மேலும் தொகுதி பங்கீடு செய்ய வாய்ப்பு கிடையாது என்று ஸ்டாலின் அவரிடம் தெரிவித்து விட்டார். அதேநேரம் திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மெகா கூட்டணி
கட்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், திமுக கூட்டணி இப்போது மெகா கூட்டணியாக உருவாகியுள்ளது. கூட்டணியின் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன என்று ஸ்டாலின் அறிவித்து விட்டதால், இனிமேல் தேமுதிக இந்த கூட்டணியில் இடம் பெறப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்து வந்து இருந்தார் ஸ்டாலின். ஆனால் விஜயகாந்த் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.
தேமுதிக பேரம் பேசும் வலிமை
தேமுதிக இன்னும் எந்த ஒரு கூட்டணியிலும் சேரும் முடிவை அறிவிக்கவில்லை. இப்போது அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாய்ப்பு அதிமுக கூட்டணியில் சேருவது, அல்லது தனித்து போட்டியிடுவதுதான். தனித்து போட்டியிடும் அளவுக்கு கட்சி வலிமையாக இல்லை என்பதால், அதிமுகவுடன் தேமுதிக செல்வதுதான் ஒரே வழி.
தேமுதிக சீட்டுகள் எண்ணிக்கை
எனவே இப்போது அதிமுகவுக்கு பேரம் பேசும் ஆற்றல் அதிகரித்துள்ளது. தேமுதிகவுக்கும் சீட்டுகள் எண்ணிக்கை அதிமுக குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 5 தொகுதிகள் வரை வேண்டுமானால் அதிமுக தர வாய்ப்புள்ளதே தவிர, பாமகவிற்கு நிகராக 7 சீட்டுகள் கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால், பாஜக சார்பில், அதிமுகவிற்கு, நெருக்கடி கொடுத்தால் வேண்டுமானால், தேமுதிகவிற்கு 7 தொகுதி கிடைக்கலாம்.