வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சியா? ஆளுநர் வதந்தி பரப்புகிறார்.. பொய் பேசுகிறார்- திமுக கண்டனம்
சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொய் சொல்கிறார்; வதந்தி பரப்புகிறார் என திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டுகளை நேற்று வீசினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபரை பிடித்தனர். அந்த நபர் ரவுடி கருக்கா வினோத் என விசாரணையில் தெரிய வந்தது. வினோத்திடம் இருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேற்று விளக்கம் அளித்தார். அதில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மதுபோதையில் பெட்ரோல் குண்டை வினோத் வீசியுள்ளார். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்ல. அடையாறு சர்தார் பட்டேல் சாலையில்தான் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது என்றார் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்.
பின்னர் நேற்று இரவு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவம் பற்றி பதிவிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததாவது: ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் மாளிகையின் இந்த பதிவுக்கு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜீவ் காந்தி கூறுகையில், பொய் பேசுவதும், வதந்தி பரப்புவதும் தமிழ்நாடு ஆளுநரின் வழக்கமான செயல்களில் ஒன்று என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications