'தலைவா' படத்துக்காக ஜெயலலிதாவிடம் விஜய் கைகட்டி நின்றதுதான் பாசிசம்.. கேப்விடாமல் திமுக தாக்குதல்!
சென்னை: பாசிசமா? பாயாசமா? என திமுகவை கிண்டலடித்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், திமுகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். " ஒருவர் தன் படத்தை வெளியிட இயலாமல் கைகட்டி நின்றார் அது பாசிசம்" என நடிகர் விஜய்யை விமர்சித்திருக்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் சல்மா.
விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், மீடியா டிரோல் பண்றது.. ஆபாசமாக் பேசுவது.. அல்லு சில்லு.. இதை எல்லாம் வைத்துக் கொண்டு அவதூறு பரப்புவது.. இந்த பயாஸ் கோப்பு எல்லாம் காட்டுவது.. இந்த ஏ டீம், பி டீம்னு பொய் பிரசாரம் செய்து இந்த படையை மட்டும் வீழ்த்திவிடலாம் என நினைக்காதீங்க. மக்களை ஏமாற்றுகிற கரப்ஷன் கபடதாரிகளை ஜனநாயக போர்க்களத்தில் நாம சந்திக்கிற நாள்.. வெகுதொலைவில் இல்லை..

இங்க ஒரு கூட்டம்.. ஒரே பாட்டை பாடிகிட்டு இருக்கு.. அதாவது யார் அரசியலுக்கு வந்தாலும் அவங்க மேல குறிப்பிட்ட கலரை பூசுகிறார்கள்.. இவங்களுக்கு எப்ப பார்த்தாலும் இந்த பாசிசம், பாசிசம்.. அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா? என பேசியிருந்தார்.
நடிகர் விஜய்யின் இந்த பாசிசம் தொடர்பான கேள்விக்கு திமுக தரப்பில் தொடர்ந்து பதிலடி தரப்பட்டு வருகிறது. திமுகவின் செய்தித் தொடர்பாளரான கவிஞர் சல்மா, நடிகர் விஜய்க்கு தமது எக்ஸ் பக்கத்தில் அளித்த பதில்:
- தன் படத்தை வெளியிட இயலாமல் கைகட்டி நின்றார் அது பாசிசம்.
- பாதர் ஸ்டேன் சாமியை சிறையில் தண்ணீர் குடிக்க விடாமல் கொன்றது பாசிசம்.
- போலிஸ் ஆபிசர் சஞ்சீவ் பட் , உமர் காலித் போன்றவர்களை சிறையில் அடைத்து ஜாமீன் தர மறுத்தது பாசிசம்
- பெண் ஐஏஎஸ் ஆபிசர் முகத்தில் ஆசிட் அடித்தது பாசிசம்
- பாசிசத்தின் அர்த்தம் விளங்காமல் பேசியிருக்கிறார்.

- திமுகவுக்கு எதிரியாக தன்னை நினைப்பதற்கோ, சொல்வதற்கோ ஒரு தகுதி இருக்க வேண்டும். இவ்வாறு கவிஞர் சல்மா கூறியுள்ளார்.
இதேபோல திமுகவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான போஸ்வெங்கட், "யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம் என போட்ட எக்ஸ் பதிவும் கடும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவிடம் விஜய் கைகட்டி நின்றது ஏன்?: 2013-ம் ஆண்டு தலைவா திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார் விஜய். ஆனால் அதிமுக வெற்றிக்கு அணில்போல உதவியதாக விஜய் பேசியிருந்தார். அதேபோல விஜய்யால்தான் அதிமுக ஆட்சி அமைந்தது என சீமான் பேசியிருந்ததால் ஜெயலலிதா தரப்பு கோபமடைந்தது. இந்த நிலையில் தலைவா படம் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு எஸ்டேட் சென்றார் விஜய். ஆனால் ஜெயலலிதாவோ, விஜய்யை சந்திக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் நடிகர் விஜய். இதனையே கவிஞர் சல்மா மறைமுகமாக "தன் படத்தை வெளியிட இயலாமல் கைகட்டி நின்றார் அது பாசிசம்" என குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications