விஜய்யால தான் லாபமே.. 2026ல் 200 தான் டார்கெட்! ஈரோடு வெற்றியால் உற்சாகத்தில் திமுக உடன்பிறப்புகள்!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கொடுத்த வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறது திமுக தலைமை. 2026இல் திமுகவுக்கு 200 தொகுதி என டார்கெட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதை சாத்தியப்படுத்த உடன்பிறப்புகள் தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது திமுகவுக்கு எந்த விதத்திலும் பின்னடைவை தராது எனவும், சொல்லப்போனால் அவரே திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருப்பார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளரான சந்திரகுமார் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கிறார். 17 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்ற அவர் 90659 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திமுகவை எதிர்த்து தமிழகத்தின் ஒரே பிரதான கட்சியான நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நிலையில் அதன் வேட்பாளரான சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 ஓட்டுகளை மட்டுமே பெற்று இருக்கிறார். அவர் டெபாசிட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான பாஜக அதிமுக புறக்கணித்த நிலையில், நடிகர் விஜய்யும் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார். நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் இறங்கிய நிலையில் தற்போது டெபாசிட்டையும் பறிகொடுத்து இருக்கிறது. இதன் மூலம் அதிமுக பாஜக வாக்குகள் திமுகவுக்கு சென்றிருக்கிறது. நோட்டாவுக்கு 6000 வாக்குகள் பதிவாகி இருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
இப்படியாக திமுகவின் வெற்றிக்கு எதிர்க்கட்சிகளை காரணமாக அமைந்திருந்ததும் கவனிக்கத்தக்கது. இது ஒருபுறம் இருக்க 2026 தேர்தலில் இருநூறு தொகுதிகள் டார்கெட் என திமுக பணியாற்றி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கொடுத்திருக்கும் வெற்றி உடன்பிறப்புகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சியின் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை வார்டு வார்டாக சென்று வாக்கு கேட்பது, வாக்காளர்களை கவனிப்பது என இடைத்தேர்தல் களைகட்டும்.
ஆனால் இந்த இடைத்தேர்தலை பெரிய அளவில் திமுக தலைமை கண்டு கொள்ளவில்லை என்றே கூறலாம். முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பட்டாளங்கள் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. உள்ளூர் அமைச்சரான முத்துசாமி மட்டுமே வாக்கு சேகரித்தார். மேலும் பெரிய அளவில் எந்தவித சர்ச்சைகளும் இன்றி தேர்தல் முடிவடைந்து இருக்கிறது. எனவே இதே பார்முலாவை வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை வெற்றிக் களமாக மாற்ற திட்டமிட்டுள்ளது திமுக தலைமை.
மேலும் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது 2026இல் திமுகவுக்கு எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள். 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க மக்கள் நல கூட்டணி ஒரு முக்கிய காரணமாக இருந்தது. வைகோவின் மதிமுக, விஜயகாந்த்தின் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனி கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், அது அதிமுகவுக்கு மறைமுகமாக உதவியதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் ’பீ டீம்’ எனவும் இந்த கூட்டணி விமர்சிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணி தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. இந்த நிலையில் அதே ஃபார்முலாவை 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. தற்போது அதிமுக பாஜக கூட்டணி அமையவே அமையாது என அதிமுகவினர் உறுதியாக கூறப்படுகிறது. நான்காவதாக விஜய் தனித்து களமிறங்கினாலும் அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் அது அதிமுக, பாஜக, நாம் தமிழர் வாக்குகளையே பாதிக்கும்.
எனவே திமுகவுக்கு அது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமையும். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தால் எவ்வித பிரச்சனையும் வராது சொல்லப்போனால் விஜய் தான் திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருப்பார் என்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications