நடிகர் திலகம் சிவாஜி சிலையை அடையாறு ஆற்றங்கரையோரம் வைத்தது யார்?சட்டசபையில் காரசார விவாதம்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றி அடையாறு ஆற்றங்கரை ஓரம் வைத்தது யார்? என்பது தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில் சிலை வைக்க மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெரும் முயற்சிகள் எடுத்தார். இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை மீறி மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே கம்பீரமாக சிவாஜி சிலை திறக்கப்பட்டது.

அந்த சிலை திறப்பு விழாவில் உருக்கமாக பேசிய கருணாநிதி, சிவாஜியுடன் தனக்கிருந்த நட்பு, சிவாஜிக்கும் கமலாவுக்கும் தனது தலைமையில் நடந்த திருமணம், தற்போது சிலைத்திறப்பு விழாவை நடத்த எதிர்கொண்ட முட்டுக்கட்டைகளை விவரித்தார். அப்போது அதைக்கேட்டு சிவாஜியின் மனைவி கமலா கண்கலங்கினார்.
மேலும் எனது நண்பன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன் என உருக்கமாக கருணாநிதி பேசியது அனைவரையும் நெகிழ வைத்தது.
அதன் பின்னர் சிவாஜி கணேசன் சிலையை அங்கிருந்து அகற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. சிவாஜி கணேசன் சிலை சாலையை மறைப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டு சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது. சிவாஜி கணேசன் சிலையை அகற்றினால் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் எதிரில் வைக்கலாம் என அப்போது யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அடையாறில் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து அங்கு வைக்கப்பட்டது. இதற்கு பலரும் அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்தப்பிரச்சினை நேற்று சட்டசபையில் எதிரொலித்தது.
பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன், கருணாநிதி பார்த்து பார்த்து வடிவமைத்த நடிகர் திலகம் சிவாஜியின் சிலை, சில காரணங்களால் கடந்த ஆட்சியில் அகற்றப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
அப்போது, குறுக்கிட்ட அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், நீதிமன்ற உத்தரவு காரணமாகத்தான் சிலை வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டது என்றார். இதற்கு பதிலளித்த துரைசந்திரசேகரன், அதிமுக ஆட்சிக் காலத்தில் அகற்றப்பட்டது என்றுதான் குறிப்பிட்டேன் என்றார். இதே துரைசந்திரசேகரன் தான், 1989-ல் திருவையாறு சட்டசபை தொகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, யாருடைய பார்வைக்கும் படக்கூடாது என்பதற்காக சிலையை அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் அடையாறு ஆற்றைப் பார்க்கும் வகையில் வைத்தது யார்? என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications