விஜய் கூட்டணி தற்கொலைக்கு சமம்.. ராகுல் காந்தியிடம் 40 நிமிடங்கள் பேசிய ப.சிதம்பரம்.. என்ன நடந்தது?
டெல்லி: திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம் என்று அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் ப.சிதம்பரம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நடந்த விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்பி-க்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் 40 பேர் வரை இந்த ஆலோசனையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒவ்வொரு நிர்வாகியிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்றே கூறி இருக்கின்றனர்.
ஒரு சிலர் மட்டும் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதேபோல் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. அனைத்து கருத்துக்களையும் பதிவு செய்து கொண்ட காங்கிரஸ் தலைமை, விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
அதுவரை கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடம் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சுமார் 40 நிமிடங்கள் தனியாக ஆலோசித்ததாக தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணியின் அவசியம் என்ன என்பதையும் ப.சிதம்பரம் தெளிவாக எடுத்து கூறி இருக்கிறார்.
அதேபோல் தமிழ்நாட்டில் தவெகவுக்கு கட்டமைப்பு இல்லை என்றும், அவர்களுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவுக்கு வலுவான கட்டமைப்பு பலம் என்பதோடு, மீண்டும் ஆட்சியில் இருக்க முடியும் என்றும் கூறி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்துக்களையும் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடம் ப.சிதம்பரம் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜனவரி இறுதி வாரத்தில் ராகுல் காந்தி தமிழ்நாடு வரும் போது, முதல்வர் ஸ்டாலினை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications