எங்களுக்கு கெடு விதிக்கப்பட்டதா.. காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதியாக உள்ளது! செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு திமுக எந்த கெடுவும் விதிக்கவில்லை என்றும், கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறிய செல்வப்பெருந்தகை, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில், திடீரென முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுகவிடம் கேட்டு வந்தது. ஆனால் கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இணைந்திருப்பதால், 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக கூறியது.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நடத்தும் பேச்சுவார்த்தையில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை. இதனால் நேரடியாக டெல்லி மேலிடத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதன் காரணமாக சோனியா காந்தி தலையிட்டு மல்லிகார்ஜுன கார்மே மூலமாக ப.சிதம்பரம் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அரங்கேறிய சம்பவங்களை செல்வப்பெருந்தகையிடம் கேட்டுக் கொண்ட ப.சிதம்பரம், டெல்லியின் ரகசிய தகவல் மற்றும் எண்ணத்தையும் கூற ஸ்டாலினின் வீட்டிற்கு சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான ஆலோசனை நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு பின் திமுக 29 தொகுதிகள் வரை கொடுக்க இறங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் எண்ணமோ 36 தொகுதிகளாக இருப்பதாக தெரிகிறது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.
திமுக - காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் எந்த இழுபறியும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக எந்த கெடுவும் விதிக்கவில்லை. அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம்.. பேசி முடித்த பின் அத்தனை தகவலையும் செய்தியாளர்களுக்கு செல்வோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications