ஒன்னும் பண்ண முடியாது! திமுக கூட்டணியில் கல்லெறிந்த பாலகிருஷ்ணன்! தூபம் போடும் செல்வ பெருந்தகை! பரபர
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணி இல்லாமல் திமுகவும் அதிமுகவும் ஜெயிக்க முடியாது என கூறியிருந்தார் சிபிஎம் பாலகிருஷ்ணன். அதற்கு கூட்டணியில் தான் பங்கு, ஆட்சியில் கிடையாது என கூறியிருந்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி. இந்நிலையில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என தன் பங்குக்கு காங்கிரஸ் செல்வ பெருந்தகை கூற கூட்டணியில் லேசாக புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வருக்கைக்குப் பின் தமிழகத்தில் அரசியல் களம் சூடி பிடித்திருப்பது என்னவோ உண்மை தான். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் என நாள் தோறும் விஜய் கட்சி குறித்தே ஏதாவது ஒரு வகையில் பேசித் தான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசியது அதிமுக திமுக கூட்டணி கட்சிகள் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என விஜய் பேசியது பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதற்கு முன்பாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச, அதற்கு பிறகு பல கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து பேசி வருகின்றன.
மேலும் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது என திமுக, அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பேசி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,"தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது இயலாத காரியம். புதிதாக வந்துள்ள சில கட்சிகள், நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்கின்றனர். வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு வழங்க போகிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்" என கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி," திமுக அதிமுக கூட்டணியில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கூட்டணி என்பது திமுகவை பொருத்தவரையில் ஒரே கருத்துடைய இயக்கங்கள் காங்கிரஸ், சிபிஎம், சிறுபான்மை இயக்கம், முஸ்லிம் லீக் தொடர்ந்து 1967 இல் இருந்து கூட்டணியில் உள்ளனர். இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு வழங்கியது கிடையாது" என கூறியிருந்தார். இதனால் விவகாரம் அதோடு முடிந்து போனது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் செல்வப் பெருந்தகை," 2006ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்றாலும் தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் எந்தவித நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு வழங்கியது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. தனித்து நின்று முழு மெஜாரிட்டியை பெற்று ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியுமா என்றால் அது கேள்விக்குறி தான். யாரும் இங்கு தனியாக நின்று ஆட்சி அமைக்க முடியாத சூழல் தான் இருக்கிறது" என பேசி இருக்கிறார்.
இதன் மூலம் திமுக வெற்றி பெற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தான் காரணம் என்பது போல செல்வப் பெருந்தகை பேசி இருப்பதாக கூறும் அரசியல் நிபுணர்கள், மற்ற கட்சிகளும் இதே போல பேசினால் நிச்சயம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications