முரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடி
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
முரசொலி நிலம் விவகாரத்தில் ராமதாசும், பாஜக நிர்வாகி சீனிவாசனும் உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்பியதாக ஆர்.எஸ்.பாரதி தனது மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு வரும் 5-ம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

கருத்து மோதல்
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், அதனை மறுத்து முரசொலி அலுவலகம் ஆவணங்களை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அதை ஏற்க மறுத்த ராமதாஸ் மூலப்பத்திரம் வேண்டும் என மீண்டும் ட்வீட் செய்தார். இதனால் திமுக பாமக இடையே அறிக்கையுத்தம் நடைபெற்றது.

ஆணையத்தில் புகார்
திமுக-பாமக இடையேயான கருத்துமோதலில் பாஜகவும் நுழைந்தது. அக்கட்சியின் தேசியச் செயலாளர் சீனிவாசன் பாமகவை விட ஒரு படி மேலாக சென்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக அவர் அளித்த புகார் திமுகவை கொந்தளிக்க வைத்தது.

நழுவல்
முரசொலி அலுவலகத்தை வைத்து பாமகவும், பாஜகவும் அரசியல் செய்வதாக கூறிய திமுக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை கூறியது. ஆனால் புகார் கூறிய விசாரணைக்கு ஆஜராகாமல் சீனிவாசன் அவகாசம் கேட்டு நழுவினார்.

மன்னிப்பு
முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு பரப்பியதற்கு பாமக நிறுவனர் ராமதாசும், பாஜக தேசியச் செயலாளர் சீனிவாசனும் திமுகவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார். மேலும், அவ்வாறு செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

5-ம் தேதி விசாரணை
ஆனால் பாமக மற்றும் பாஜக தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இந்த வழக்கு வரும் 5-ம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications