கையில் கத்தை கத்தையாக பணத்துடன் நின்ற ஆ.ராசா! தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எல்லோருக்கும் ரூ.200!
சென்னை: ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று முன் தினம் கையில் கத்தை கத்தையாக பணத்தை வைத்திருந்த ஆ.ராசா, தன்னை சந்தித்து வாழ்த்து பெற வந்தவர்களுக்கு ரூ.200ஐ அன்பளிப்பாக கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஆங்கில புத்தாண்டு அன்று தன்னை சந்தித்து வாழ்த்து பெற வரும் கட்சிக்காரர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும் பத்து ரூபாய் சலவை நோட்டுக்களை கத்தை கத்தையாக வைத்துக் கொண்டு கொடுப்பார்.
இந்நிலையில் கருணாநிதியிடம் அரசியல் பாலபாடம் கற்ற ஆ.ராசா, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எல்லோருக்கும் ரூ.200 கொடுத்து புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று முன் தினம் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை நேரில் சந்தித்து கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துப் பெற்றுச் சென்றனர். அப்போது கையில் 200 ரூபாய் சலவை நோட்டுகளை கத்தையாக வைத்துக் கொண்டு நின்ற ஆ.ராசா, தன்னிடம் வாழ்த்து பெற வந்த அனைவரையும் புத்தாண்டு அன்று வெறுங்கையுடன் அனுப்பக் கூடாது என்பதற்காக 200 ரூபாய் சலவை நோட்டை பரிசாக கொடுத்து அனுப்பினார்.

கருணாநிதி ஸ்டைல்
இது கிட்டதட்ட கருணாநிதி ஸ்டைல் அரசியல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் தன்னிடம் வாழ்த்து பெற வருபவர்களை வெறும் கையுடன் அனுப்பாமல் பத்து ரூபாய் அல்லது இருபது ரூபாய் சலவை நோட்டுக்களை பரிசாக கொடுத்து அனுப்புவார். புத்தாண்டு அன்று ''தலைவர்'' கையால் பணம் வாங்க வேண்டும் என்பதற்காகவே கட்சிக்காரர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு கோபாலபுரத்தில் குவிவார்கள்.

ரூ.200 பரிசு
அதேபோல் தான் சென்னையில் உள்ள ஆ.ராசா இல்லத்திலும் கட்சியினர் இந்த புத்தாண்டு அன்று குவிந்தார்கள். ரூ.10, ரூ.20 கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு சென்று கஞ்சத்தனமாக இருக்கிறாரே என கட்சிக்காரர்கள் விமர்சிப்பார்கள் என்பதால் இந்த முறை சற்று தாராளம் காட்டினார் ஆ.ராசா. தன்னை பார்க்க வந்த தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எல்லோருக்கும் ரூ.200 சலவை நோட்டை கொடுத்து புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

கதிர் ஆனந்த் எம்.பி.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் தனது மகள் மற்றுன் மகனுடன் சென்று ஆ.ராசாவிடம் புத்தாண்டு வாழ்த்து பெற்றார். இதேபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன், பிரபாகரன், கோவி செழியன் என இன்னும் பலரும் ஆ.ராசாவை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றனர்.












Click it and Unblock the Notifications