டிசம்பர் 1ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எதற்காக இந்த மீட்டிங் தெரியுமா?
சென்னை: டிசம்பர் 1ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஊர்தோறும் நடத்துவது பற்றி இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;
பேராசிரியர் க அன்பழகன் 100ஆவது பிறந்தநாள் விழா.... சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாவட்டச் செயலாளர்கள்
''கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்பழகன் நூற்றாண்டு
மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டங்களை ஊர் தோறும் நடத்துவது பற்றியும் அன்பழகனுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம்களை நடத்துவது பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவரது குடும்பத்தினரை பெருமைப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல்
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்குவது பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சில அசைன்மெண்ட்களை வழங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியெல்லாம் விரிவாக பேசப்படும் எனக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் கூட்டணி விவகாரம் பற்றி இந்தக் கூட்டத்தில் எதுவும் பேசப்படாது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சிப்பணிகள்
மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் இந்தக் கூட்டத்தில் பேசுவார் என எதிரார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தி திணிப்பு எதிர்ப்பு உட்பட இன்னும் சில தீர்மானங்களும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளன.