நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபர ‛அட்வைஸ்’
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதற்கிடையே தான் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்த நிலையில் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வராகவும், திமுக தலைவராகவும் ஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் தான் அடிக்கடி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 5ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடந்தது. காணொலி காட்சி வாயிலாக நடந்த இந்த கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்கிறார். இந்த கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
அதாவது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை இன்னும் அதிகப்படுத்தவும், மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை மாநிலமெங்கும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்.
இதுதவிர நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெல்லும் முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதனால் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்வது பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதோடு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அதாவது டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டம் சமீபத்தில் திருச்சியில் நடந்து முடிந்தது. இதையடுத்து தென்மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 17 ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தென்மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டம் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
மேலும் திமுக அனைத்து தொண்டர்களுக்கு பொதுவானது. நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமில்லை. அதேபோல் ஆட்சி அனைவருக்கும் பொதுவானது. அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. அமைச்சர்கள் உள்பட நிர்வாகிகள் அனைவரும் பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவனமாக பேச வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications