115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு!
சென்னை: திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 115ஆக உயர்த்த அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. கட்சிக்குள் இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருக்கும் நிலையில், அதற்கான பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தி இருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் அதற்குப் பிந்தைய கள நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் திமுக தலைமை, கட்சியில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. திமுகவில் தற்போது 72 ஆக உள்ள அமைப்பு ரீதியான மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

தேர்தல் தோல்விக்கான விசாரணைக் குழுவின் அறிக்கையும் அதனையே கூறி இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப திமுகவில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாலின் தீவிரமாக கவனித்திருக்கிறார். திமுகவில் வாரிசுகளே பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களாக வலம் வருகிறார்கள்.
இதனால் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞர்கள் தவெகவில் ஐக்கியமாகி வருவதை தெளிவாக விசாரணைக் குழு தெரிவித்திருக்கிறது. இதனால் சீனியர் மாவட்டச் செயலாளர்களின் பவரை குறைத்து, இளைஞர்களுக்கு 60% மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பை அளிக்க அறிவாலயம் தயாராகி வருகிறது. இதற்கு சீனியர்கள் சிலர் முட்டுக் கட்டை போட்டாலும், ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
அதேபோல் ஸ்டாலின் சில முக்கிய மாவட்டச் செயலாளர்களிடம் நேரடியாக கடிந்து கொண்டிருக்கிறார். சுமார் 34 மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரின் பவர் கணிசமாக குறைக்கப்படவுள்ளது. இருவரின் கட்டுப்பாட்டிலும் தான் அதிக தொகுதிகள் இருக்கின்றன.
இதனால் சென்னையில் தலித் மற்றும் மீனவ சமூகங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுக்கு பொறுப்பு வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதனால் ஆர்.டி.சேகர், பரந்தாமன், கேபி சங்கர், அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா, சிற்றரசு ஆகியோர் பவர் சென்டராக உருவாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் உதயநிதி ஸ்டாலினின் கைகள் ஓங்கும் சூழல் வந்துள்ளது.
கொளத்தூரில் ஸ்டாலின் அடைந்த தோல்வியால் சேகர்பாபு மீதான கோபம் இன்னும் திமுக மேலிடத்தில் குறையவில்லை. இதனால் வடசென்னையில் சேகர்பாபுவுக்கு அதிக அதிகாரத்தை கொடுக்க வேண்டாம் என்று ஆலோசனை நடந்து வருகிறது. இதனை ஜூன் மாத இறுதியிலேயே ஸ்டாலின் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications