"என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி".. அதிரடி வியூகத்துடன் களமிறங்கும் திமுக
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. அந்த வகையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்கிற பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் விதமாக இந்த பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
தமிழ்நாட்டில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த 3 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே களத்தில் இறங்கி பரபரப்பான தேர்தல் வியூகங்கள், பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். தமிழ்நாடு அரசியலை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது.

திமுக வியூகங்கள்
திமுக தங்களின் கூட்டணி பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்க வைப்பதற்காக முயற்சி செய்கிறார். மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம் போல நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தலைமையில் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கும் பணியில் அந்தக் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே திமுக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற பெயரில் முகாம்களை நடத்தி மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் நகர்வை எடுத்தனர். தொகுதி வாரியாக திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து உரையாடி வருகிறார். எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாகவும் அவர் திமுக நிர்வாகிகளுக்கு செல்போனில் அழைத்து பேசினார்.
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்கிற பிரச்சாரத்தை திமுக இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கச்சாவடியிலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த முன்னெடுப்பை திமுக தலைமை கையில் எடுத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அதேபோல, தமிழ்நாடு முழுவதும் மாநில நிர்வாகிகள் தொடங்கி அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் அந்தந்த வாக்குசாவடி அருகே இந்த நிகழ்வில் பங்கேற்றனர். வீடு வீடாக சென்று தேர்தல் பணிகளில் ஈடுபடும் திமுக பெண் நிர்வாகிகள் அதிகளவில் பங்கேற்றனர். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுகவின் இந்த நகர்வு திமுக பூத் கமிட்டியை பலப்படுத்தி, அவர்களின் தொண்டர்களை உற்சாகத்துடன் களப்பணியில் ஈடுபடுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். தனது வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான இலக்கை முதல்வர் நிர்ணயித்துக் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications