கேம் சேஞ்சரான பிரேமலதா.. திமுக கூட்டணியில் தேமுதிக? 1 ராஜ்ய சபா + 6 தொகுதி.. ஸ்டாலின் முடிவு?
சென்னை: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளன. பிரேமலதா - திமுக தலைவர்கள் இடையே கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

மாநிலங்களவை இடத்திற்குச் சம்மதம்
திமுக மேலிடத்துடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடத்தையும் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. "மாநிலங்களவை இடம் வேண்டும் என்பதே தேமுதிகவின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. அதனைப் பரிசீலிக்க திமுக தயாராக இருக்கிறது. ஆனால், சட்டமன்றத் தொகுதிகளை அவர்கள் கேட்பது போல அதிக எண்ணிக்கையில் ஒதுக்க வாய்ப்பில்லை," என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி
தேமுதிக தரப்பில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்கப்பட்டாலும், திமுக அவர்களை 6 சட்டமன்றத் தொகுதிகளுடன் சமாதானப்படுத்த முயன்று வருகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் இது அதிகபட்சமாக 7 இடங்கள் வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இது குறித்துப் பேசிய மூத்த திமுக நிர்வாகி ஒருவர், "எங்களால் 6 அல்லது 7 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது. திமுக கூட்டணியில் இணைந்தால் மட்டுமே தேமுதிகவால் வெற்றி பெற முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதிமுகவுடன் இணைந்தால் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்," என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் நிலை
ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்துடன் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அந்த கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட உடன்பாடு இல்லாத காரணத்தால் அந்தப் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது திமுகவுடன் தேமுதிக கைகோர்க்கும் பட்சத்தில், அது வட தமிழகம் மற்றும் சில முக்கிய மாவட்டங்களில் ஆளுங்கட்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த மாத இறுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு நிகழக்கூடும் என்றும், அப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேம் சேஞ்சர்' தேமுதிக: யாருடன் கைகோர்ப்பார்கள்?
பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. 2026 தேர்தலில் தேமுதிக ஒரு முக்கிய 'கேம் சேஞ்சர்' ஆக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கடந்த கால வாக்கு வங்கித் தரவுகள்:
தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறைந்திருந்தாலும், நெருக்கமான போட்டியில் 1% முதல் 2% வாக்குகள் கூட வெற்றியாளரைத் தீர்மானிக்கும்.
2011 (சட்டமன்றம்) - 7.9% (29 இடங்கள்)| அதிமுக-வுடன் கூட்டணி (வெற்றி) | - இந்த தேர்தலில் விஜயகாந்த் கேம் சேஞ்சராக இருந்தார். எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார்.
2016 (சட்டமன்றம்)- 2.4%| மக்கள் நலக் கூட்டணி (தோல்வி) | இந்த தேர்தலில் விஜயகாந்த் கேம் சேஞ்சராக இருந்தார். தோல்வி அடைந்தாலும் வாக்குகளை பிரித்து அதிமுக வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
2021 (சட்டமன்றம்) - 0.43% | அமமுக-வுடன் கூட்டணி (தோல்வி) |
2024 (நாடாளுமன்றம்) - 1.0%| அதிமுக-வுடன் கூட்டணி |
2011, 2016ல் விஜயகாந்திற்கு வந்த அதே வாய்ப்பு தற்போது பிரேமலதா விஜயகாந்திற்கு வந்துள்ளது. தற்போது தேமுதிகவை இழுக்க என்.டி.ஏ மற்றும் விஜய் தரப்பில் கடும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தேமுதிக எடுக்கும் முடிவு வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலங்களில் பல தொகுதிகளின் முடிவை மாற்றும் வல்லமை கொண்டது.












Click it and Unblock the Notifications