இதென்னடா சோதனை.. அண்ணா அறிவாலயத்தை அதிர வைத்த திடீர் 'உதயசூரியன் ஒழிக' கோஷம்!
சென்னை: திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திடீரென உதயசூரியன் ஒழிக என முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதில் திமுக படுதீவிரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டுவந்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது திமுக.
கடந்த காலங்களை போல இல்லாமல் தொடர்ந்து நடத்தப்படும் முப்பெரும் விழாக்கள் மூலம் இதனை சாதித்துவிட முடியும் என நினைக்கிறது திமுக தலைமை. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்க்க முடியாத கோஷ்டி பூசல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அறிவாலயத்தில் ஒலித்த உதயசூரியன் ஒழிக
கள்ளக்குறிச்சி திமுகவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயமே அதிர்ச்சியில் உறைந்து போனது. அண்ணா அறிவாலயத்துக்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர், மு.க.ஸ்டாலின் வாழ்க- உதயசூரியன் ஒழிக என கோஷம் போட்டனர்.

மா.செ. உதயசூரியன் மீது புகார்
திமுகவின் சின்னமான உதயசூரியனை ஒழிக என ஏன் கோஷம் போடுகிறார்கள் என முதலில் அண்ணா அறிவாலயத்தில் இருந்த திமுகவினரே குழம்பிப் போயினர். பின்னர்தான் கள்ளக்குறிச்சி திமுக மா.செ.உதயசூரியனுக்கு எதிராக கோஷம் போட்டது தெரியவந்தது. அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுடன் உதயசூரியன் நெருக்கமாக இருக்கிறார் என்பதுதான் புகார்.

பஞ்சாயத்துகள்
திமுகவின் தலைமையிடம் உதயசூரியன் குறித்து புகார் தெரிவிக்க வந்தவர்கள்தான் இந்த முழக்கத்தை எழுப்பியிருக்கின்றனர். இதேபோல வேறு சில மாவட்ட திமுகவினரும் இப்போது உள்ளூர் பஞ்சாயத்தை பைசல் செய்வதற்காக அறிவாலயத்தை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர்.

நேருவின் முயற்சி வீண்
தேர்தல் காலத்தில் மாவட்டங்களில் நிலவும் பூசலை முடிவுக்கு கொண்டுவரத்தான் கே.என். நேருவை அனுப்பி வைத்தார் ஸ்டாலின். ஆனாலும் நேருவாலும் சில மாவட்ட அக்கப்போர்களை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. இப்போது அறிவாலயத்துக்கே அதிருப்தியாளர்கள் புகார் மனுவுடன் காவடி எடுக்க தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications