“தேர்தல் ஹீரோ”.. கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு.. 3 அமைச்சர்கள் உள்ளே!
சென்னை: திமுக சார்பில் 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக எம்.பி கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கோவி செழியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கோவி செழியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், டிகேஎஸ் இளங்கோவன், எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் (ஓய்வுபெற்ற ஐஏஎஸ்), சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பிரதிநிதிகள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், நகர் நல சங்கத்தின் நிர்வாகிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், வாகன ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள், என அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.
தேர்தல் சமயங்களில் திமுகவின் தேர்தல் அறிக்கை, கதாநாயகன் என வர்ணிக்கப்படுவது வழக்கம். திமுகவின் தேர்தல் அறிக்கை முக்கியமான விவாதங்களை ஏற்படுத்தும். இந்நிலையில், இந்த முறையும் திமுகவின் தேர்தல் அறிக்கை பேசுபொருளாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications