கரூர் தொகுதியை காங்கிரஸ் ஜோதிமணிக்கு தரவே கூடாது.. அறிவாலயத்தில் மொத்தமாக குமுறிய திமுக நிர்வாகிகள்!
சென்னை: கரூர் லோக்சபா தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத் தரவே கூடாது; திமுகதான் போட்டியிட வேண்டும் என அம்மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் நேரில் வலியுறுத்தி உள்ளனர்.
கரூர் லோக்சபா தொகுதியில் கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி
ஆகிய 4 மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. வேடசந்தூர்(திண்டுக்கல்), அரவக்குறிச்சி( கரூர்), கரூர் (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), விராலிமலை (புதுக்கோட்டை), மணப்பாறை (திருச்சி) ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கரூர் தொகுதி தேர்தல் வரலாறு: கரூர் லோக்சபா தொகுதியானது 1957-ம் ஆண்டு முதல் 16 தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 7 முறை வென்றுள்ளது. அண்ணாதிமுக 6 முறை வென்றுள்ளது. திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் தலா 1 தேர்தலில் வென்றுள்ளன. 1957 முதல் 1984-ம் ஆண்டு வரை கரூர் லோக்சபா தொகுதி எம்பிக்கள் அறியப்படாத முகங்களாக இருந்தனர். அண்ணா திமுகவின் தம்பிதுரை 4 முறை இத்தொகுதியில் வென்று விஐபி தொகுதியாக்கினார். திமுகவின் சீனியர்களில் ஒருவரான கேசி பழனிசாமி 2004-ல் இத்தொகுதியில் வென்றார். டெல்லி காங்கிரஸ் மேலிடத்துடன் மிக நெருக்கமான ஜோதிமணி தற்போது கரூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார்.
கரூரில் காங்கிரஸுக்கு திமுக எதிர்ப்பு: கரூர் தொகுதியானது 4 திசைகளில் திரும்பி இருக்கும் மாவட்டங்களை உள்ளடக்கி இருப்பதால் எந்த ஒரு எம்பியாலும் 4 மாவட்ட சட்டசபை தொகுதிகளின் மக்கள் கோரிக்கையையும் முழுமையாக நிறைவேற்றி தர முடியாத நிலை இருக்கிறது என்பது கள நிலவரம். இம்முறை லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியை வழக்கம் போல திமுகவிடம் காங்கிரஸ் கேட்டு வருகிறது என்கின்றன தகவல்கள். ஆனால் கரூர் தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு தரவே கூடாது என்கின்றனர் திமுகவினர். இதனை சமூக வலைதளங்களிலும் ஏற்கனவே வலியுறுத்தி கொண்டிருக்கின்றனர்.
காங்கிரஸுக்கு, ஜோதிமணிக்கு தராதீங்க: இந்த பரபரப்புக்கு நடுவே சென்னையில் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் லோக்சபா தொகுதி வாரியாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் தொகுதி திமுகவினர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு கொடுக்கவே கூடாது என ஒட்டுமொத்தமாக திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினராம். மேலும் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்பி ஜோதிமணி தேர்தலில் ஜெயித்தது முதல் திமுகவுடன் இடைவிடாமல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதையும் தற்போது சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பகிரங்கமாக மோதிய நிகழ்வுகளையும் பட்டியல் போட்டு குமுறினராம் திமுக நிர்வாகிகள். ஆகையால் இந்த முறையாவது கரூர் தொகுதியை திமுக பெற வேண்டும்; திமுக வேட்பாளரை அறிவித்தால் உயிரை கொடுத்தாவது வெற்றி பெற்று தருவோம் எனவும் வலியுறுத்தி இருக்கின்றனர்.
தலைமை முடிவெடுக்கும்: கரூர் திமுகவினரின் குமுறலைக் கேட்டுக் கொண்ட திமுக ஒருங்கிணைப்புக் குழுவினர், தொகுதி யாருக்கு என்பதை தலைவர்தான் முடிவு செய்வார். நீங்கள் தெரிவித்த கருத்துகளும் தலைவரிடம் தெரிவிப்போம். நாம் இப்போது "இந்தியா" கூட்டணியில் இருக்கிறோம். ஆகையால் கட்சி தலைமை என்ன முடிவெடுத்து அறிவித்தாலும் வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள் என அறிவுறுத்தினராம். தங்களது கருத்துக்கு கட்சித் தலைமை மதிப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் கரூர் லோக்சபா தொகுதி திமுகவினர்.












Click it and Unblock the Notifications