எங்கும் வரவில்லை.. ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கு.. துரைமுருகன் கேள்வியால் பரபரப்பு
சென்னை: எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பகீர் குண்டை தூக்கி போட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா, ஒரு வாரம் பெங்களூருவில் ஓய்வெடுத்துவிட்டு கடந்த 8ம் தேதி சென்னை திரும்பினார்.
சசிகலா வருகை அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆனால் இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் கூறியது இல்லை.
பன்னீர்செல்வம் டார்கெட்
முதல்முறையாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சசிகலா வருகையை மறைமுகமாக மையப்படுத்தி ஒரு கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்தை டார்கெட் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஒபிஎஸ்சிடம் இருக்கிறது
துரைமுருகன் இதுபற்றி கூறுகையில், எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வத்திடம் ஏதோ திட்டம் இருக்கிறது. யார் தலைவர் என்பதே குழப்பமாக உள்ளதால் தேர்தல் வரை அதிமுக இருக்குமா என தெரியவில்லை என்று கூறியுள்ளார். இவரது கருத்துக்கு அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என தெரிகிறது.
பிரதீப் வெளியிட்ட கருத்து
துரைமுருகன் இப்படி சந்தேகப்பட்டு பேசுவதற்கு சில யூகங்களும் காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது சசிகலாவிற்கு எதிராக இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ஜெயக்குமாரும், சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலரே பேசி வருகின்றனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் எந்த விமர்சனமும் இதுவரை வைக்கவில்லை. சசிகலா பூரண உடல் நலம் பெற வேண்டும் என அவரது மகன் பிரதீப் தெரிவித்த கருத்தும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
பதில் அளிப்பாரா
மேலும் சசிகலாவையும். டிடிவி தினகரனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கும் அளவுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விமர்சிக்காமல் அமைதி காத்து வருகிறார். இதை மறைமுகமாக குறிப்பிட்டு தான் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருப்பதாக விமர்சிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஓ பன்னீர்செல்ம் பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.