தென் மாவட்டத்தில் எம்.பி. கனிமொழிக்கு முக்கியத்துவம்! திமுக தந்த சூப்பர் பவர்!
சென்னை: தென் மாவட்ட திமுகவில் எம்பி கனிமொழியின் கை ஓங்கும் வகையில் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு தென் மாவட்டங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கனிமொழியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுக முயன்று வருகிறது. அது போல் திமுகவின் செயல்பாடுகள் சரியில்லை என கூறி பிரச்சாரம் செய்யும் அதிமுக கூட்டணி, திமுகவை அனுப்பிவிட்டு ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சியினர் வரும் தேர்தலில் தாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் என கூறி வருகிறார்கள். அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வரும் தேர்தலுக்கு சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
பாஜகவில் கூட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்துவிட்டார்கள். அந்த வகையில் திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தை 7 மண்டலங்களாக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் தென் மண்டல பொறுப்பாளராக உள்ள கனிமொழியிடம் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் உள்ள தொகுதிகளில் உள்கட்சி பூசல் அதிகமாக இருக்கிறது. இந்த பூசல்களுக்கு மத்தியில் தகுதியானவர்களையும் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்களையும் வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும் என கனிமொழிக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.
ஆதரவாளர்கள், வேண்டியவர்கள் என எந்த சலுகையும் காட்டாமல் உண்மையில் யாருக்கு செல்வாக்கோ அவர்கள்தான் வேட்பாளர்கள் என்பதில் திமுக தலைமை கறாராக இருக்கிறதாம். வரும் தேர்தலில் விஜய்யின் தவெகவும் போட்டியிடுவதால் வாக்குகள் எப்படி வேண்டுமானாலும் சிதறும் என்பதால் வேட்பாளர்கள் தேர்வில் அதிக கவனம் கொள்ள முடிவு செய்துள்ளது.
இதையே கனிமொழிக்கும் அறிவுறுத்தியுள்ளதாம். கனிமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சலுகையால் கட்சியின் மூத்த நிர்வாகிகள், குறிப்பாக தென் மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதே நேரம் கனிமொழியின் ஆதரவாளர்கள் குஷியில் இருக்கிறார்களாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கனிமொழிக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் எனும் உயரிய பதவி கிடைத்ததன் மூலம் அவரது ஆதரவாளர்கள், "அக்காவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்" என பூரிப்பில் இருந்தனர்களாம். தற்போது இது போன்ற வேட்பாளர் தேர்விலும் கனிமொழிக்கு முக்கியவத்துவம் கிடைத்துள்ளதால் அவர்கள் குஷியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications