3 ஆண்டு நிறைவு.. 4ம் ஆண்டில் நுழைந்த முதல்வர் ஸ்டாலின் ஆட்சி! மக்களை கவரும் திட்டங்கள்! நீளும் சாதனை
சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியை பிடித்து 3 ஆண்டு நிறைவடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களின் பட்டியல் என்பது நீண்டு கொண்டே செல்கிறது. அதன் விபரம் வருமாறு:
தமிழக சட்டசபைக்கு கடந்த 2021ல் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 157 இடங்களில் வென்றது. திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 132 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் 17 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த தேர்தலில் அதிமுக 62 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலம், பாமக 5 இடங்களிலும், சுயேச்சைகள் 4 (ஓபிஎஸ் அணியினர்) வெற்றி பெற்றனர். தற்போது 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக முதல்வராக 2021 மே 7 ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 4வது ஆண்டில் அடியெடுத்துள்ளது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் "இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி.. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது.. நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...
பெருமையோடு சொல்கிறேன்'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் முதல்வராக பொறுப்பேற்றது முதல் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி கடந்த 3 ஆண்டில் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் அதனால் பயனடைந்தவர்களின் பட்டியல் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் தினத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அதோடு அரசு பஸ்களில் மகளிருக்கான இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விடியல் பயணத்திட்டத்தில் 460 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ரூ.107 கோட பேர் பயனடைந்துள்ளனர்.
மேலும் முதல்வரின் முகவரி என்ற திட்டத்தில் பொதுமக்களின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டுள்ளன. இதில் 19.69 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுதவிர 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது ரூ5,579 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக இதுதவிர கடந்த 3 ஆண்டு ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான் முதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் உள்ளிட்டவை செயல்பாட்டில் உள்ளது. இதில் நான் முதல்வன் திட்டம் போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு பயனளித்து வருகிறது.
புதுமைப்பெண் திட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு, மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதுதவிர வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் தங்குவதற்காக தோழி விடுதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். இது தவிர கேலோ இந்தியா இளையோர் போட்டி, 44 வது செஸ் உலக ஒலிம்பியாட், முதலமைச்சர் கோப்பை -2023 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
இதுதவிர நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ள தமிழ்நாடு, இந்தியாவின் ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் 80.9 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், தேசிய பன்முகத்தன்மை தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளது. அதுமட்டுமின்றி துபாய், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 12 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் 2024ம் ஆண்டில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டுமே 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.24 சதவிகிதம் உள்ள நிலையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே 8.19 சதவிகிதமாக உயர்த்துள்ளது. இது தமிழக அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். மேலும் மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. 2021-22ல் புத்தாக்கத் தொழில் தொடங்குவதில், தமிழ்நாடு முதலிடத்திலும் வகிக்கிறது. தேசிய தனிநபர் வருமானமே 1.72 லட்ச ரூபாயாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் மட்டுமே 2.75 லட்சம் ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications