டாஸ்மாக் விற்பனையே இப்படி என்றால்.. திமுகவினரின் வருமானம் என்னவாக இருக்கும்? அண்ணாமலை காட்டம்
சென்னை: திமுகவினர் நடத்தும் மது ஆலைகளிடம் வாங்கி விற்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனை இத்தனை என்றால், அந்த ஆலைகள் நடத்தும் திமுகவினரின் வருமானம் என்னவாக இருக்கும்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மது விற்பனையும் கணிசமாக அதிகரிக்கும். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைக்கும். அந்த வகையில், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாட்களிலும் சேர்த்து டாஸ்மாக் மதுபான கடைகளில் மொத்தம் ரூ467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன் தினம் அதாவது, 11 ஆம் தேதி அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.52.73 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.48.12 கோடி, கோவையில் ரூ.40.20 கோடி, திருச்சியில் ரூ.40.02 கோடி, சேலத்தில் ரூ.39.78 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி தினமான நேற்று திருச்சி மாவட்டத்தில் தான் அதிக அளவு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் ரூ.55.60 கோடி, சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.511.97 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, கோவையில் ரூ.39.61 கோடிக்கு மது விற்பனையானதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டை விட கூடுதலாக நடப்பு ஆண்டில் தீபாவளிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுவிலக்கு துறையா அல்லது மது விற்பனைத் துறையா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு, மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது திமுக அரசு என சாடியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- சென்னை அண்ணா நகரில், இன்று காலை, மது போதையில் வாகனத்தை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் , இருவர் பலியாகியிருக்கிறார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதே நேரம், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நடந்த மது விற்பனை, சுமார் 467.69 கோடி என டாஸ்மாக் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.
மதுவிலக்கு துறையா அல்லது மது விற்பனைத் துறையா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு, மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது திமுக அரசு. மதுவால் ஏற்படும் உடல் நலக் குறைவு மரணங்கள், இது போன்ற விபத்துக்களால் பலியாகும் அப்பாவிகளின் மரணங்கள் எதைப் பற்றியும் கவலை இன்றி, உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனை நடத்தி வருகிறது திமுக.
திமுகவினர் நடத்தும் மது ஆலைகளிடம் வாங்கி விற்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனை இத்தனை என்றால், அந்த ஆலைகள் நடத்தும் திமுகவினரின் வருமானம் என்னவாக இருக்கும்? தங்கள் கட்சிக்காரர்கள் வருமானத்துக்காக, அப்பாவிப் பொதுமக்கள் உயிரை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications