வெறும் மழைக்கே திமுக அலறுகிறது.. அதிமுக பல புயல்களை கண்டு புயலாக பணி செய்தது.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: சென்னையில் ஓரளவு பெய்த மழைக்கே மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். வெறும் மழைக்கே திமுக அரசு அலறுகிறது. வர்தா, கஜா, தானே, ஒர்கி என பல புயல்களை கண்டு புயல் வேகத்தில் அதிமுக அரசு பணி செய்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.
அதிமுகவின் 53வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு மழை பெய்யவில்லை. வெயில் தான் அடிக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது போல் பெரிதாக மழை பெய்யவில்லை. நேற்று முன் தினம் மழை பெய்யும் என்றார்கள். அப்போது ஓரளவு பெய்தது. மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கபட்டது. ஆனால் பெரிதாக மழை பெய்யவில்லை. பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே மழை நீர் தேங்கவில்லை.
ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியே சென்றிருக்க முடியாது. வெறும் மழை தான் பெய்திருக்கிறது. ஆனால் இதற்கே திமுக அரசு அலறுகிறது. அதிமுக பல புயல்களை பார்த்திருக்கு. தானே புயல், ஒகி புயல், வர்தா புயல், கஜா புயல் என பல புயல்களை கண்டு புயல் வேகத்தில் பணியாற்றி மக்கள் பிரச்சினைகளை தீர்த்தது அரசு அதிமுக அரசு. அதிமுக அரசை குறை சொல்வதற்கு எவருக்கும் தகுதி கிடையாது.
டீ வாங்கி கொடுத்துவிட்டால் போதுமா?.. தூய்மை பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுக்கிறார். அதே தூய்மை பணியாளர்களின் குறைகளை போக்கினீர்களா?.. பல்லாயிரக்கணக்கான பேர் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மேற்கொண்டு வந்தனர். 17 ஆண்டு காலம் தூய்மை பணி செய்து வந்தனர். கொரோனா காலத்தில் தன் உயிரையும் துச்சமென நினைத்து பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்கள் பலரை நீக்கிவிட்டாங்க.
இப்போது டீ வாங்கி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா?.. தூய்மை பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிட்டீங்க.. அதிமுக ஆட்சியில் தான் தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. டீ வாங்கி கொடுப்பதால் டிவியில் பரபரப்பு வரும். ஆனால் மக்களுக்கு என்ன பயன். வெள்ளை அறிக்கை கேட்டால் தருவது அரசின் கடமை. ஆனால் வெள்ளை அறிக்கை கேட்டால் உதயநிதி ஸ்டாலின் முதிர்ச்சியில்லாமல் பதில் அளிக்கிறார். அனைத்து துறைகளின் வேலையையும் உதயநிதி ஸ்டாலினே செய்கிறார்.
அதிமுக பிரிந்து கிடக்கிறது என்று சொல்லாதீர்கள். அதிமுக பிரிந்து இருக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்தாதீங்க. பிரிந்து போனவர்கள் பல அவதாரங்களை எடுக்கிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாம் பச்சை பொய். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் நீக்கப்பட்டவர்கள். நீக்கப்பட்டவர்கள் எல்லாம் நீக்கப்பட்டவர்கள் தான். அதிமுக ஒன்றாக தான் இருக்கிறது. அது எங்கள் தரப்பில் இருப்பவர்கள் தான். அதிமுக, ஒன்றாக போச்சு.. இரண்டாக போச்சு என்று சொல்லாதீங்க.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications