“இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்".. சபதம் எடுத்த அன்புமணி
திருப்பத்தூர்: "இன்னும் 8 மாதத்தில் கொடுங்கோல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு சமூக நீதி தேவை என்பதற்காகவே இந்த கட்சியைத் தொடங்கினோம்.

கடந்த மாதம் பாமக நடத்திய மாநாட்டை பார்த்து எதிர்க்கட்சிகளும், மற்ற கட்சிகளும் பொறாமையிலும், பீதியிலும் உள்ளனர். ஏனென்றால், எப்படி மாநாட்டிற்கு ஆள் சேர்ந்தார்கள்? பாமக மாநாட்டை நடத்தவிடக்கூடாது என பல வழக்குகளை தொடர்ந்தார்கள். ஆனால், எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும், அதனை உடைத்தெறிந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். எவ்வளவு காலம்தான் நாம் அவர்களிடம் கேட்பது? நாமும் ஆளவேண்டும்?
வன்னியர்களின் தரவுகளை சேகரித்து உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தோம்.
அப்போது, 'சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தனியாகவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்துவேன்' னக் கூறினார். பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு அளித்து வருகின்றனர். ஆனால், 'தமிழ்நாட்டிற்கு அந்த அதிகாரம் இல்லை, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என்று பல்டி அடித்துவிட்டார்.
ஏனென்றால், நம்முடைய மாநாட்டை பார்த்த ஸ்டாலின், நேரடியாக களத்தில் சந்திக்க முடியாமல் சூழ்ச்சி செய்து வீழ்த்த நினைக்கிறார். ஆனால் இன்னும் 8 மாதத்தில் கொடுங்கோல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வீதி வீதியாகப் போதைப்பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். எனவே, தமிழ்நாடு என்ற பெயரை, குடிகார நாடு, போதை நாடு, கஞ்சா நாடு என மாற்றிக் கொள்ளலாம்.
கல்லணையில் நீரை திறந்துவிடுவது அதிகாரிகளின் வேலை, அதை ஏன் முதலமைச்சர் செய்கிறார்? அவரது வேலை, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை சீர் செய்வது. எங்களுக்கு 1,000 ரூபாய் வேண்டாம்.. சமூக நீதி வேண்டும். அதை கொடுக்க துப்பில்லை, பெண்களை செட் செய்து ரோடு ஷோவில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஆனால், தமிழ்நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை," என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.












Click it and Unblock the Notifications