அடுத்த குறி மும்பைக்கு? பெரிய பிளானோடு குதிக்கும் திமுக.. களமிறக்கப்பட்ட மகாராஷ்டிர புள்ளி! பின்னணி
சென்னை: சென்னை, கோவை, துபாயை தொடர்ந்து மும்பையிலும் திமுக கால் பதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மகாராஷ்டிராவின் முக்கிய புள்ளி ஒருவர் உதவி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரிலிருந்தே பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகும் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை அமைப்பதற்கான பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது.
அதற்கு டெல்லியில் திமுக அலுவலகமே உதாரணம். திமுக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள தீன தயாள் உபாத்யாய சாலையில்தான் ஆம் ஆத்மி அலுவலகமும், பாஜக அலுவலகமும் அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் 3ஆவது கட்சி
நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சி என சொல்லிக் கொள்ளும் திமுக டெல்லியில் கோலோச்சியது தொண்டர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரதமரை நேரில் சந்தித்து திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு முதல்வர் அழைத்திருந்தார்.

பிடிஐ செய்தி நிறுவனம்
அந்த அழைப்புக்கு மறுநாளே பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும். தமிழகத்தில் இது போன்று மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை ஓரம் கட்டியுள்ளன என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிராக
டெல்லிக்கே சென்று பாஜகவுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் திமுகவில் அலுவலகத் திறப்பு விழா பிரம்மாண்டமாகவும் நடத்தியது. இந்த நிலையில் தற்போது டெல்லி மட்டுமல்லாமல் மும்பையிலும் திமுக அலுவலகத்தை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக சொல்லப்படுகிறது.

முதல்வரின் குடும்ப உறுப்பினர்
இது குறித்து முதல்வரின் குடும்ப உறுப்பினர் ஐடியா கொடுக்க உடனே முதல்வரும் மறுப்பு சொல்லாமல் ஒப்புக் கொண்டாராம். அந்த குடும்ப உறுப்பினர் வெறும் திமுக அலுவலகத்தை திறக்க மட்டும் ஐடியா கொடுக்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்கள் உள்ளன.

ரூ 6100 கோடி
அது போல் அண்மையில் துபாய்க்கு போய் ரூ 6100 கோடி முதலீடுகளை முதல்வர் ஸ்டாலின் தமிழக நலனுக்காக பெற்று வந்தார். அந்த வகையில் இந்தியாவில் வர்த்தக நகரங்களுள் முக்கியத்துவம் பெற்ற மும்பையாகும். எனவே இங்கிருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்ற ஒரு திட்டத்தை அந்த குடும்ப உறுப்பினர் கூறினாராம். இது போல் நிறைய இடங்களில் இருந்து தொழில் வளர்ச்சியை பெற்றால்தான் முதல்வர் ஸ்டாலினின் லட்சியமான 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட முடியும். எனவேதான் குடும்ப உறுப்பினர் சொன்னதும் முதல்வர் ஒப்புக் கொண்டார் என்கிறார்கள். இந்த நிலையில் மும்பையில் திமுக அலுவலகத்தை தொடங்க திமுக எம்பி கனிமொழி மூலம் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது.

சுப்ரியா சுலே
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலேவும் (சரத்பவாரின் மகள்) திமுக எம்பி கனிமொழியும் நெருக்கமான தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் திமுக அலுவலகத்திற்கு சுப்ரியா உதவியை கனிமொழி நாடியுள்ளதாகவும் அவர் ஒரு சில பழைய கட்டடங்களை காண்பித்துள்ளதாகவும் திமுக தலைவருக்கு பிடித்திருந்தால் அந்த இடத்தை தேர்வு செய்து டெல்லியை போல் மும்பையிலும் புதிய கட்டடத்தை கட்டலாம் என்ற யோசனையில் திமுக இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications