"லிஸ்ட் " ரெடியாகுதாம்.. அடுத்த டிஜிபி யாரு.. அடுத்த தலைமை செயலாளர் யாரு.. அதுக்குள்ளயா!
திமுக ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: தேர்தலுக்கு நாள் நெருங்க நெருங்க, பிரதான அரசியல் கட்சிகள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன.. இதில் பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.. பல யூகத்தின் அடிப்படையிலான தகவல்கள்.. அந்த வகையில்தான் திமுக குறித்த செய்தி கசிந்து வருகிறது!
வழக்கமாக தேர்தல் சமயங்களில், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும்.. அந்த வகையில்தான் இந்த முறையும் வெளியாகி வருகிறது.
இதுவரை வந்த கணிப்புகளில் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்கின்றன.. திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்றும், 180 - 200 வரை கூட தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகின்றன. அதற்கேற்றவாறு, கடந்த ஒருவாரமாகவே, 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி என்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருவதையும் கவனிக்க முடிகிறது.

திமுக
எத்தனை கருத்து கணிப்புகள் வந்தாலும், திமுக அதை பெரிதுப்படுத்தி கொள்ளாமல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது வேறு விஷயம்.. ஆனால், வெற்றி உறுதி, அடுத்து நாம்தான் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் திமுக தரப்பில் தேர்தலுக்கு பிந்தைய வேலைகளில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனராம். அதாவது, முக்கிய அதிகாரிகள் யார் யார் என்ற லிஸ்ட்டை எடுத்து வருவதாகவும், மண்டல, மாவட்ட வாரியாக பிரித்து எந்த அதிகாரியை நியமிக்கலாம் என்ற பணியில் ஈடுபட்டுள்ளனராம்..

அதிகாரிகள்
இதில் நேர்மையானவர்கள் நிறைய பேரை செலக்ட் செய்திருக்கிறார்களாம்.. அதிலும், இந்த அதிமுக ஆட்சியில் நேர்மையாக பணியாற்றியவர்களுக்கும் வாய்ப்பு உள்ளதாம். இதை உத்தேச அதிகாரிகள் லிஸ்ட் என்று கூட சொல்லலாம்.. இதேபோல அமைச்சர்கள் லிஸ்ட்கூட ஒன்று தயாராகி இருப்பதாக சொலகிறார்கள்.. ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை...

சுதாரிப்பு
இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தேர்தல் வரை வரத்தான் செய்யும்.. ஒருவேளை இது உண்மையாக இருந்தால், திமுக சுதாரித்து கொள்ள வேண்டும்.

20 தொகுதிகள்
கடந்த முறை தேர்தலிலும் இப்படித்தான் நடந்தது.. 2016 தேர்தலில், கடைசி நாட்களில் திமுக சற்று அசால்ட்டாக இருந்துவிட்டது.. விழுந்து விழுந்து தேர்தல் விவகாரத்தை கையில் எடுத்தாலும், நூலிழையில் ஆட்சியை தவறவிட்டுவிட்டது.. அதாவது, சுமார் 20 தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனத்தை திமுக அன்று செலுத்தியிருந்தால், ஆட்சியை ஒரு சதவீதத்தில் பறி கொடுத்திருக்காது..

பிரச்சாரம்
கடைசி சில நாட்களில், தேர்தலுக்கு பிந்தைய விஷயங்களில் கவனத்தை செலுத்தவும், மக்கள் நலக்கூட்டணியானது, திமுகவின் ஓட்டுக்களை அபாரமாக பிரித்துவிட்டது.. எனவே, கடந்த கால கசப்பு அனுபவமும் திமுகவுக்கு இப்போது இருப்பதால், அவ்வளவு லேசில் எதையும் கோட்டை விட்டுவிடாது, இந்த பிரச்சாரத்தின் கடைசி நாள் வரை முழு மூச்சாக இறங்கி திமுகவினர் வேலை பார்ப்பார்கள்" என்றனர்.












Click it and Unblock the Notifications