DMK Alliance 2019: நாட்கள் நெருங்குகிறது.. கூட்டணியை இறுதி செய்யாமல் அமைதி காக்கும் திமுக.. ஏன்?
Recommended Video
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள இருபெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளன.
கடந்த வருடம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின்போது, அழைப்பிதழில் பெயர் இடம்பெறாமல் விழாவுக்கு வந்திருந்த ராகுலை பிரதமர் வேட்பாளாராக முன்மொழிந்து தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரசும் இடம் பெறுகிறது என்பதை அப்போதே அறிவித்துவிட்டார் ஸ்டாலின்.
ஆனால் அவர்களுடன் தோழமையில் இருக்கின்ற மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளனவா என்பது குறித்து இன்னமும் திமுக தலைமை விளக்கவில்லை.
தனித்துப் போட்டி- மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி முடிவு.. விஜயகாந்த் ஸ்டைலில் கமல்ஹாசன்
மதிமுக, விசிக உண்டா
இன்னும் ஒரு படி மேலே சென்று திமுக பொருளாளர் துரைமுருகன் விடுதலை சிறுத்தைகளோ மதிமுகவோ எங்களுடன் கூட்டணியில் இல்லை என்று அறிவித்தார். உடனடியாக மதிமுக பொது செயலாளர் வைகோ ஸ்டாலினை சந்தித்து பேசினார் அப்போதும் ஸ்டாலின் இவர்கள் எங்களுடன் கூட்டணியில் உள்ளனர் என்று அறிவிக்கவில்லை. ஆனால் ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்னர் வைகோ நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை திமுக தலைமை விளக்க வேண்டும் என்று பொங்கினார். ஆனால் ஸ்டாலினை சந்தித்தப் பிறகு அப்படியே அடங்கிப் போனார். கூட்டணி முழு வடிவம் அல்லது தாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோமா என்பதை உறுதி செய்வதற்கு முன்பே தான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் திருமாவளவன்.
அமைதி காக்கும் குழு
நிலைமை இப்படி நீடிக்கையில் இரு வாரங்களுக்கு முன்பே தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக திமுகவில் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் இந்தக் குழு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லையோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு இந்தக் குழு மவுனம் காக்கிறது. இந்தக் குழு எந்தக் கட்சியுடனும் பேச்சு நடத்தியதாகவோ அல்லது தொகுதி ஒதுக்கீடு குறித்தோ எந்த பேச்சுவார்த்தையோ இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை. திமுக பாணியில் சொல்வதென்றால் தோழமையுடனான பாணியில் காங்கிரஸ் தவிர 7 கட்சிகள் உள்ளன.
பாமகவை சேர்க்க வேண்டும்
இப்போதே அதிக கட்சிகள் சேர்ந்தால் திமுக குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட வேண்டியிருக்கும் என்ற எண்ணம் திமுக தலைமைக்கு உள்ளது. அதே வேளையில் மேற்கு மாவட்டங்களில் திமுக பலவீனமாக உள்ளதால் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதோடு காங்கிரசும் பாமகவை திமுக கூட்டணியில் கொண்டு வர பெருமுயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பாமகவும் திமுகவுடன் இணைவதையே விரும்புவதால் பாமக தரப்பில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சிறுத்தைகள் தேவையில்லையா
பாமக திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் இந்த கூட்டணியில் தொடர்வார்களா என்ற கேள்வி எழுகிறது. விடுதலை சிறுத்தைகளை தூக்கி சுமக்க வேண்டுமா என்ற எண்ணமும் திமுக தலைமையிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் அரசியல் களம் இப்போது திமுகவுக்கு மிகவும் சாதகமாக காணப்படுவதால் விடுதலை சிறுத்தைகளை கழட்டி விடலாம் என்ற எண்ணமும் திமுகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், கூட்டணியை உறுதி செய்வதிலும் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதிலும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் தாமதம், கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையும் கட்சியினர் மத்தியில் வலுவாக உள்ளதாம்.