அப்படியே மாறும் திமுக ஐடி விங்! வேற லெவல் பிளான்.. டி.ஆர்.பி.ராஜாவுக்கு காத்திருக்கும் முக்கிய பொறுப்பு!
சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் நீண்ட காலமாக ஒரு சலசலப்பு நிலவி வரும் நிலையில் தற்போது புதியதொரு மாற்றத்திற்கு தயாராகி வருவதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் ஐடி விங் யாருக்கு என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகிறதாம்.
அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் என்பது முக்கியம். அந்த வகையில் காலத்திற்கேற்ப யுத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன. அந்த காலங்களில் போஸ்டர் அடிப்பது, துண்டு பிரச்சுரங்கள் வெளியிடுவது, பேனர் வைப்பது என இருந்தது.
தற்போது கால மாற்றத்திற்கேற்ப சமூக வலைதளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிடுவதை அடுத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பாணியை மாற்றிக் கொண்டன. கட்சியின் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, முந்தைய ஆட்சியில் செய்த முக்கிய திட்டங்கள், மாற்று கட்சி ஆட்சியால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வீடு வீடாக கொண்டு சேர்க்கும் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை கையாண்டு வருகிறது.
பயிர் காப்பீடு தருவதில் அதிகாரிகள் குளறுபடி... விளக்கம் கேட்ட டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ
அதிமுக வெற்றி
இந்த முயற்சியில் அதிமுக 2016-ஆம் ஆண்டு வெற்றி கண்டதை அடுத்து திமுகவும் 2017ஆம் ஆண்டு தனக்கென ஒரு ஐடி விங்கை தொடங்கியது. இதன் மொத்த பொறுப்பையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைத்தது. அவர் பொருளாதார மேதை, சமூகவலைதளங்களை சிறப்பாக கையாள்வார் என்பதால் அவரிடம் மொத்த பொறுப்பும் கொடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி
திமுக ஐடி விங்கின் செயலாளராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும், 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் ஐடி விங்கில் செயல்பட்டு வரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதி அமைச்சர் என்ற முக்கிய பொறுப்பையும் வகிக்கிறார்.
ஐடி விங் முக்கியம்
ஐடிவிங் கட்சிக்கு எவ்வளவு முக்கியமோ நிதித் துறை ஆட்சிக்கும் முக்கியமானது. இதில் எங்கு சறுக்கினாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டு விடும். எனவே பணிச் சுமையால், ஐடி விங் பதவியை ராஜினாமா செய்ய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜினாமா செய்து விட்டதாகவும் கூட கூறப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதியான தகவலை ஐடி விங் வட்டாரங்கள் வெளியிடவில்லை. இந்த நிலையில் திமுக ஐடி விங் செயலாளர் பதவிக்கு திமுகவில் போட்டா போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது.
டிஆர்பி ராஜா
இந்த முக்கிய பதவியை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு கொடுக்க திமுக தலைமை விரும்புகிறதாம். இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் தமிழ் ஒன் இந்தியா சார்பில் பேசினோம். அப்போது அவர்கள் கூறுகையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.
டெல்டா
இன்னொரு விஷயம், திமுக ஐடி விங்கை யார் நிர்வகிப்பது என்ற ரேஸ் ஒரு புறமிருக்க, அந்த பதவியை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு வழங்கலாம் என தலைமை முடிவு செய்துள்ளதாம். தொகுதி விவகாரங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் டிஆர்பி ராஜா சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பது அவரது முக்கிய பிளஸ்ஸாக தலைமை கருதுகிறது. இதனால் ஐடி விங்கின் செயலாளர் பொறுப்பை ராஜாவிடம் ஒப்படைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறார்கள்.
ராஜினாமா
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ராஜினாமா ஏற்கப்பட்டவுடன் திமுகவின் ஐடி விங் மொத்தமும் டிஆர்பி ராஜாவிடம் கொடுக்கப்படும். எனவே எல்லாமே ரெடியாகிவிட்டதாகவும் திமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்று வெளியாக வேண்டியதே பாக்கி என அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஒன் இந்தியா சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குழுவினரை தொடர்பு கொண்ட போது எந்தவித கருத்தையும் சொல்ல மறுத்துவிட்டனர். மேலும் பிடிஆரின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் திமுக ஐடி விங் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.