"பேராசிரியர் எங்கே".. அன்றே நண்பனை தேடிய கருணாநிதி.. இதோ இன்று புறப்பட்டு விட்டார் அன்பழகன்!
அன்பழகன் மறைவுக்கு டிஆர்பி ராஜா இரங்கல் பதிவிட்டுள்ளார்
சென்னை: "என்னப்பா..." என்று கருணாநிதி காதருகில் சென்று கனிமொழி கேட்க.. உடனே "பேராசிரியரா, இதோ இங்கே இருக்காங்கப்பா" என்று சொல்கிறார்.. உடனே பேராசிரியரும் கருணாநிதியிடம் கையை நீட்ட.. இருவரும் நீண்ட நேரம் கை குலுக்குகிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார் எம்எல்ஏ டிஆர்பி ராஜா.. "கழக இளைஞர்களின் கட்டுப்பாடு மிக்க தாத்தா" என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் ராஜா!
Recommended Video
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மூப்பு மற்றும் உடல் நலிவு காரணமாக இன்று அதிகாலை 1 மணியளவில் மரணமடைந்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகனுக்கு சில தினங்களாகவே உடல்நிலை மோசமடைந்திருந்தது.
இரங்கல்
தீவிர சிகிச்சைகள் தரப்பட்டும், பலனின்றி அவர் காலமானார்... மூத்த தலைவரின் இந்த மறைவு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரது மறைவுக்கு பல தலைவர்கள் நேரிலும், அறிக்கை வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேரிலும் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
|
கட்டுப்பாடு மிக்க தாத்தா
அந்த வகையில், திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் ட்விட்டரில் தனது ஆழ்ந்த இரங்கல் வரிகளை பதிவிட்டுள்ளார். "நட்புக்கு இலக்கணம் தலைவர் தளபதியின் பெரியப்பா.. கழக இளைஞர்களின் கட்டுப்பாடு மிக்க தாத்தா ... தமிழினத்தின் மான மறவர்களின் மூத்தவராக இருந்த இனமான #பேராசிரியர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் ! அவர் கட்டிக்காத்த சுயமரியாதை சுடர் என்றும் பிரகாசமாக ஒளிரச் செய்வது நமது கடமை😑🙏🏽#Perasiriyar" என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஆர் பாலு
அத்துடன் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். அதில், கருணாநிதிக்கு பிறந்த நாள் விழாவாழ அல்லது வேறு ஏதேனும் நிகழ்வா என தெரியவில்லை.. வீட்டில் வீல்சேரில் கலைஞர் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்.. குடும்பத்தினர் அவரை சுற்றி நிற்கிறார்கள்.. கருணாநிதிக்கு பின்புறம் டிஆர் பாலு, துரைமுருகன் சகிதம் நின்று கொண்டுள்ளனர்.. அப்போது கருணாநிதி பேச முயல்கிறார்.. அவர் பேசுவது யாருக்கும் சரியாக கேட்கவில்லை..
பேராசிரியர்
உடனே கனிமொழி அருகில் சென்று "என்னப்பா" என்று கேட்கிறார்.. மெல்லிய குரலில் கருணாநிதி ஏதோ சொல்ல, உடனே கனிமொழி, "பேராசிரியரா, இதோ இங்கே இருக்காங்க" என்கிறார்.. உடனே பேராசிரியரும் கருணாநிதிக்கு கை கொடுக்க.. இருவரும் நீண்ட நேரம் கைகுலுக்கி கொண்டே உள்ளனர்.. சுற்றி எத்தனை பேர் நின்றாலும், ரத்தபந்தங்களே அருகில் இருந்தாலும், கருணாநிதி உதிர்த்த அந்த ஒரு வார்த்தை பேராசிரியர்தான்... இந்த வீடியோதான் காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது.