நீட்டை ரத்துசெய்ய முடியாது, இது திமுகவிற்கு தெரியும்.. ஆனாலும் ஏமாற்றுகிறார்கள்.. சீறும் எல் முருகன்
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும் என்றும் ஆனாலும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் விமர்சித்துள்ளார்,
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக விவசாய அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக சார்பில் ஒரு லட்சம் மாஸ்க்குகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்டது.

எல் முருகன் பேச்சு
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். முன்களப் பணியாளர்களுக்கு வழங்க 1 லட்சம் மாஸ்க்குகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம். கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு தடுப்பூசி முறையாகவே பிரித்து மாநிலங்களுக்கு அளித்து வருகிறது. ஆனால், இங்கு திமுக தலைமையிலான மாநில அரசு, குறை கூறுவதையே வேலையாக வைத்துள்ளது.

மாதம்தோறும் ரூ 1000 எங்கே
திமுக ஆட்சி அமைத்து 30 நாட்கள் கடந்துவிட்டது. பல தாய்மார்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் மாதம் 1000 அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், இப்போது ஆட்சி அமைத்த பிறகு, அது குறித்து வாய் திறக்கவே மறுக்கின்றனர். எனவே, தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

நீட்டை ரத்து செய்ய முடியாது
நீட் விவகாரத்தில் மாணவர்களைக் குழப்பக் கூடாது. நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான். மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்ற திமுக செயல்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும். ஆனாலும் மக்களையும் மாணவர்களை ஏமாற்ற திமுக பல முயற்சிகளைச் செய்து வருகிறது. சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் கல்வித் தரத்தைத் தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும். மாணவர்கள் கல்வியில் திமுக அரசியல் செய்ய வேண்டாம்.

நூலகங்களில் முரசொலி நாளிதழ்
நூலகங்களில் முரசொலி நாளிதழ் கட்டாயம் வாங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இது அதிகார துஷ்பிரோகம். அனைத்து நாளிதழ்களையும் நூலகங்களில் வாங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். முதலில் அதை நிறைவேற்றுங்கள், பின்னர் மத்திய அரசைக் குறை கூறலாம்" என்றும் எல் முருகன் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications