கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு.. திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!
சென்னை: கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக நிர்வாகியும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துருவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் நிதின் சாய் (19 வயது) கல்லுாரி மாணவர். இவர், நண்பரின் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், கடந்த மே 29 ஆம் தேதி, கல்லுாரி மாணவர் சந்துரு என்பவரால், காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சந்துரு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். சரண் அடைந்த சந்துரு, திமுக நிர்வாகியும், சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவரும், கவுன்சிலருமான தனசேகரனின் பேரன். ஜாமின் கோரி, சந்துரு தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜூன் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சந்துரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போதும் சந்துருவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்துரு, மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
நிதின் சாயின் நண்பர்கள், சந்துரு மற்றும் அவரது நண்பர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து உள்ளனர். அங்கு சென்றதும், நிதின் சாயும் அவரது நண்பர்களும் பைக்கில் வந்து, சந்துரு, அவரது நண்பர்கள் வந்த கார் மீது கல் எறிந்து, தகராறில் ஈடுபட்டனர். தற்காப்புக்காக, காரை வேகமாக இயக்கியபோது, துரதிர்ஷ்டவசமாக நிதின்சாய் பயணித்த டூவீலர் மீது கார் மோதியது. சந்துரு காரை ஓட்டவில்லை. கல்லுாரி மாணவரான அவர், கடந்த 26 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ளது. அவர் 45 நாட்களாக நீதிமன்ற காவலில் உள்ளார். எனவே, ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் சந்துருவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தினமும் காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும்வரை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. தலைமறைவாக கூடாது என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications