"சும்மா விட மாட்டோம்.. அண்ணாமலை மீது நானும் கேஸ் போட பேகிறேன்.." ஆவேசமான உதயநிதி! பரபர பேச்சு
சென்னை: திமுகவினர் ஊழல் பட்டியல் என்று அண்ணாமலை வெளியிட்ட ஆவணத்திற்கு எதிராகப் பலரும் வழக்கு தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து திமுக அமைச்சர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் வாட்ச் தொடர்பாகக் கடந்தாண்டே சர்ச்சை கிளம்பியது. அப்போது வாட்சின் பில்லை வெளியிட முடியுமா என்று திமுகவினர் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு ரபேல் வாட்ச் பில்லும் அத்துடன் திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என அறிவித்தார். அதன்படி சமீபத்தில் செய்யாள்களிடம் பேசிய அவர், திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி ஒன்றை வெளியிட்டார்.
அண்ணாமலை: அதில் திமுகவினர் டாப் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், இது அவர்களின் சொத்து பட்டியல் என்று சொன்ன அண்ணாமலை, "இது திமுகவினர் ஊழல் பட்டியல் இல்லை. அவர்களிடம் இருக்கும் சொத்து பட்டியல் மட்டுமே.. விரைவில் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்.. ஊழலை எதிர்த்துப் போராடுவது என்று வந்துவிட்டால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது.. அனைத்து ஊழல் கட்சிகளையும் எதிர்க்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இது அதிமுக- பாஜக கூட்டணிக்கு உள்ளேயே பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து அண்ணாமலை குறித்த எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க மாட்டேன் என்று எடப்பாடி திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதேபோல அதிமுகவின் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு எதிராகக் கருத்து கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க திமுக தரப்பும் அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
நோட்டீஸ்: திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த நோட்டீஸில், "உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள், இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோவை நீக்கவேண்டும்.

இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும். அது முதல்வர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தப்படும். இந்த அறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்யத் தவறினால், உங்களுக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என்று கூறப்பட்டிருந்தது. மேலும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியும் முதல்வர் அனுமதியுடன் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அறிவித்திருந்தார்.
உதயநிதி பரபர: இதனிடையே இந்த விவகாரம் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையொட்டி 1000 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உதயநிதி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கூறுகையில், "என்ன என்கிட்ட மட்டும் இவ்வளவு கேட்லி கேட்கறீங்க.. அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திக்கும் போது மட்டும் ஸ்கூல் டீச்சர் மாதிரி பேசுவதை மட்டும் கேட்டுட்டு வரீங்க.. அண்ணாமலை ஆதாரமற்று ஏதேதோ பேசி வருகிறார். அவர் மீது நானும் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications