"செங்கோட்டையனை பாஜக தான் அழைத்து பேசச் சொன்னதா?”.. நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்!
சென்னை: செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என சந்தேகம் எழுந்துள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜகவில் செங்கோட்டையன் யாரை சந்தித்து பேசினார், என்ன பேசினார் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளிக்கவில்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனத் தன்னிடம் கூறியதே பாஜக தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் நீக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்களான அதிமுக நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார். செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை "கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர்" என்று காட்டமாக விமர்சித்தார். தாங்கள் முன்மொழிந்ததால்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார் என்றும், கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கோராதது அவர் திமுகவின் பி-டீம் என்பதை காட்டுவதாகவும் விமர்சித்தார்.
மேலும் பேசிய செங்கோட்டையன், "அதிமுகவை ஒன்றிணைக்க என்னை அழைத்தது பாஜகதான். பிரிந்து இருப்பவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்குமாறு பாஜகவே அறிவுறுத்தியது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவை கொச்சையாக பேசினார். டிடிவி தினகரன் ஆதரவோடுதான் பெரும்பான்மையை நிரூபிக்க முடிந்தது. கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
பணம் செலவு செய்தால் போதும் என்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தவர் யார்? பாஜகவுடன் 2026 தேர்தலிலும் அதற்கு பின்னரும் கூட்டணி இல்லை என்று கூறியவர் எடப்பாடி. அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழற்றிவிட்டவர். கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது என்று எடப்பாடி கூறிய பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிமுக ஒற்றுமையாக இருந்தால் கூட்டணிக்கு நம்மை நாடி வருவார்கள். முன்னேற வேண்டும் என்றால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி பயணம் செய்யக்கூடாது." எனப் பேசினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அதிமுகவில் மட்டுமில்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன் விவகாரத்தில் திமுகவின் பின்னணி இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் பேசுகையில், "செங்கோட்டையனின் பேட்டியை கேட்டேன். அதில் தெளிவு இல்லை. எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாக கூறப்படும் போது அந்த ஆறு பேர் யார் யார் என்று செங்கோட்டையன் விளக்கவில்லை. அதே போல் பாஜகவில் செங்கோட்டையன் யாரை சந்தித்து பேசினார், என்ன பேசினார் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளிக்கவில்லை. அப்படியிருக்கையில் அது குறித்து நான் கருத்து தெரிவித்தால் தவறாக போய்விடும்.
அண்மையில் மனோஜ் பாண்டியன் திமுக சென்று தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பின்னணியிலும் திமுக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நல்லாட்சி நடைபெற வேண்டுமானால் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். 2026 தேர்தலில் திமுகவை தோற்கடிக்க அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். செங்கோட்டையன் போன்ற விவகாரங்கள் கூட்டணியை பாதிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications