அண்ணா அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள், 23 அணிகளின் செயலாளர்கள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள், 23 அணிகளின் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு, 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், "கருணாநிதியின் பன்முக ஆற்றல், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களை ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது. இருந்தாலும், தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவை எழுச்சி, உணர்ச்சியுடன் தமிழகம் முழுவதும் நடத்துவது தொடர்பாக, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.19ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், கருணாநிதி நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளைச் சேர்ந்த செயலாளர்கள், அமைச்சர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டத்திற்கு அடுத்த நாளான நாளை, திமுக இளைஞரணி, திமுக மருத்துவர்கள் அணி, திமுக மாணவரணி ஆகிய அணியினர் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications