ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. "ஜெபம்"தான் காரணம்.. சீனியர் அமைச்சர் பேசிய பேச்சால் பரபரப்பு..!
திருவள்ளூரில் அமைச்சர் நாசர் பேசின பேச்சு வைரலாகி வருகிறது
சென்னை: ஏற்கனவே திமுகவில் 3 அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், இன்னொரு அமைச்சரின் மதவாத பேச்சு பரபரப்பை கூட்டி வருகிறது.. இது முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை தந்து வருகிறது.
திமுக அமைச்சர்கள் கடந்த 2 மாத காலமாக சீரும் சிறப்புமாக தங்கள் பணிகளை செய்து கொண்டே, தொற்றையும் கட்டுப்படுத்தி வந்தனர்.
எனினும், கடந்த சில தினங்களாக அமைச்சர்கள் மீது அதிருப்திகள் வெடித்தன.. கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், உள்ளாட்சி தேர்தலிலும் உள்ளடி வேலை செய்து கட்சியை தோற்கடித்தால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன். எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்குவேன் என்றார்.
தாமோ அன்பரசன்
அதேபோலதான், மதுராந்தகத்தில் ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் தா. மோ. அன்பரசனும், "மதுராந்தகம் தொகுதிக்குள் அடங்கிய அனைத்து உள்ளாட்சி இடங்களையும் திமுக கைப்பாற்றியாக வேண்டும். அது நடக்கலைன்னா ஒன்றிய செயலாளர்கள் கழுத்தில் தலை இருக்காது, ஜெயிக்கலைன்னா கழுத்தறுத்துடுவேன்" என்றே பேசியிருக்கிறார்.
ராமச்சந்திரன்
அதேபோல, வனத்துறை அமைச்சரான அமைச்சர் ராமச்சந்திரன் மீதும் புகார் கிளம்பியது.. அவரது சொந்த மாவட்டமான நீலகிரியில், தன்னுடைய படுகர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமைச்சர் முன்னுரிமை கொடுக்கிறார் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் பேசிய மதவாத பேச்சு பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ஆம் ஆண்டின் ஆரம்ப விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட அனைத்து சபைகளின் தலைவர் டாக்டர் செல்லதுரை தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக ஆவடி சிறுபான்மை மற்றும் அரசியல் குழு தலைவர் பிஷப் டாக்டர் K.மேஷாக் ராஜா , சுவிசேஷகர் ஸ்டீபன் போதகர் ஐசக் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டனர்.
சிறுபான்மையினர்
இந்த விழாவில் முக்கிய அழைப்பாளராக கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியபோது, "இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர்... சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர்.. ஆனால் கடந்த 7 வருஷங்கள் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் கஷ்டங்கள் ஏற்படுத்தப்பட்டன அதன் விளைவு விரைவில் அந்த ஆட்சிக்கு முடிவு வரும்.
ஜெபக்கூட்டம்
இதே ஜெப கூட்டத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்று நாம் மூவரும் உள்ளோம்... இதுதான் மத நல்லிணக்கம் மத ஒற்றுமை... இந்தியா பல்வேறு மொழிகள் மதங்களை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வரும் இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது... கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான் இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்தது" என்றார்.
அதிர்ச்சி
மதநல்லிணக்க விஷயங்களை முன்வைத்து நாசர் பேசினாலும்கூட, கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்தது என்று கூறியதுதான் பல தரப்பினருக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, கிறிஸ்தவ மக்களின் திருச்சபையில் புனித இடமாக கருதப்படும் பலிபீடத்தில் திமுகவினர் அமைச்சர் பேசியபோது, ஏறி அங்கேயே நின்று கொண்டார்களாம்.. இது கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.