ஒரே உற்சாகம்.. அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின்.. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சீனியர்கள்!
திமுக அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போது 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,116 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,778 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் சுமார் 30 ஆயிரமாக உள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மிகப்பெரிய வித்தியாசத்தோடு வெற்றிமுகம் கண்டு வருவதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளார். அவரை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி தேர்தல் முடிவுகளை மு.க.ஸ்டாலின் அறிந்து வருகிறார். அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மூத்த அமைச்சர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications