முதல்வர் ஒருபக்கம் ரிப்போர்ட் தயாரிச்சா அமைச்சர்கள் செய்யுற வேலையை பாருங்க.. இந்த யாவாரம்தான் ஓடுது?
சென்னை: திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையில் தங்களது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள, தங்களது துறைகளின் நல்ல செயல்பாடுகள் முதல்வரின் கண்ணில் படுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
தங்கள் துறைகளில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த தகவல்களை அழகான புத்தகமாக்கி முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லும் வேலை வேகமாக நடக்கிறதாம்.

அமைச்சரவை மாற்றம்
ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்காக சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட இருக்கின்றன. சரியாகச் செயல்படாத அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அமைச்சர்கள் 'கிலி'யில் உள்ளனர்.

அமைச்சர்களுக்குள் போட்டி
இதனால், முதலமைச்சர் ஸ்டாலினின் பார்வையில் தாங்கள் செய்யும் பணிகள் படும்படி செய்வதை குறியாகக் கொண்டுள்ளனர். இதில் அமைச்சர்களுக்குள் பெரும் போட்டியே நடக்கிறதாம்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனை மலர் வெளியிடப்படுவது வழக்கம். இப்போது மற்ற துறைகளிலும் இதுபோல, அந்தந்த துறைகளில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து புத்தகம் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடக்கிறதாம்.

செய்தித்துறை
ஓராண்டு சாதனை மலர் மட்டுமல்லாமல், 'அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு' என்ற நூல் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் இந்த நூலை வெளியிட்டார்.
மு.பெ.சாமிநாதன் வகித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவிதான் உதயநிதிக்கு வழங்கப்பட்டது. அதைப்போல இப்போதும் உதயநிதி வருகைக்காக தனது துறை பறிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே விளம்பர வேலையை ஜரூராக செய்து வருகிறாராம் சாமிநாதன்.

சேகர்பாபு
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்களின் விவரம் அடங்கிய புத்தகம் அறநிலையத்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் புத்தகத்தையும் முதல்வர் ஸ்டாலினை வைத்தே வெளியிட வைத்தார் சேகர்பாபு.

மற்ற அமைச்சர்களும்
இதைத்தொடர்ந்து, கடந்த ஓராண்டு காலத்தில் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்களை புத்தகமாக தயாரிக்க பல அமைச்சர்கள் தங்களது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனராம்.
பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமைச்சர்கள் செய்யும் காரியங்களால் தங்களுக்குத்தான் பணிச்சுமை என அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அலுத்துக் கொள்கின்றனராம்.

ரிப்போர்ட்
அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி முதல்வர் ஒருபக்கம் ரிப்போர்ட் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர்களே தங்கள் செயல்பாடுகளின் ரிப்போர்ட்டை தயாரிப்பதில் மும்முரமாகியுள்ளனர். விரைவில் அமைச்சர்கள் அடுத்தடுத்து சாதனை மலரை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications