"ரீ-பிளேஸ்".. கனிமொழி பற்றி ஸ்டாலினுக்கு பறந்த "ரிப்போர்ட்".. புதிய பதவி தர முடிவா? என்ன காரணம்
திமுகவின் கனிமொழிக்கு புதிய பொறுப்பு தரப்படலாம் என்று கூறப்படுகிறது
சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு புதிய பதவி குறித்த பேச்சு அடிபட்டு வருகிறது.. இதற்கு பின்னணி காரணங்களும் சில வெளியாகி வருகின்றன..!
நேற்று முதல், திமுகவின் கனிமொழிக்கு புதிய பதவி தரப்படும் என்ற செய்தி வட்டமடித்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை பொறுத்தவரை ஐபேக் டீமின் பங்கு அளப்பரியது.. அந்த வகையில், வேலை பார்த்த இந்த ஒரு வருட காலத்தில் எத்தனையோ தகவல்களை தலைமைக்கு திரட்டி தந்துள்ளது ஐபேக்... இதில் கனிமொழி குறித்த சில விஷயங்களையும் அனுப்பி வைத்ததாம்.

கனிமொழி
கடந்த நவம்பர் 29-ம் தேதியே கனிமொழி தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.. அதிலும் தென்மாவட்டத்தை குறி வைத்தே பிரச்சாரத்தை துவக்கினார்.. இதன் காரணமாக, தென்மண்டலங்களில் திமுகவின் வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.. வாக்குப்பதிவின்போது, பெருமளவு அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு டிரான்ஸ்பர் ஆனதில் மிக முக்கிய பங்கு கனிமொழிக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சாத்தான்குளம்
அடுத்ததாக, பொள்ளாச்சி மற்றும் சாத்தான்குளம் விஷயங்களை கையில் எடுத்து போராடியவர்களில் முதன்மையானவர் கனிமொழி ஆவார்.. இந்த போராட்டங்கள், இந்த பிரச்சனைகளோடு மட்டும் பொருத்தி பார்க்கப்படவில்லை.. மாறாக, தென்மண்டலங்களில் திமுகவின் பலத்தை கூட்ட காரணமாக இவை இருந்திருக்கின்றன.. பென்னிக்ஸ் உயிரிழந்தபோது, கனிமொழியின் செயல்பாடுகள் திமுகவின் மத்தியில் பெரும் மதிப்பையும் பெற்றிருந்தன.

பென்னிக்ஸ்
கொரோனாவின் உச்சத்தில், தன் உயிரை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கனிமொழி தூத்துக்குடிக்கே சென்றுவிட்டாரே என்று ஆச்சரியப்பட வைத்தார்.. திமுகவில் வேறு எந்த உயர்மட்ட தலைவரும் இப்படி சாத்தான்குளத்துக்கு அந்த சமயம் செல்லாத பட்சத்தில் கனிமொழி நடத்திய போராட்டத்தின் வீரியம் இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

என் அண்ணன்
கடந்த 3 மாதங்களாக கிராம சபை கூட்டம் நடந்தபோதும் சரி, எந்த தொகுதிக்கு போனாலும், "என் அண்ணன் சொன்னதைதான் முதல்வர் நிறைவேற்றுகிறார்" என்ற விஷயத்தையும் மறக்காமல் பதிவு செய்து வந்தார்.. கனிமொழியை சந்திப்பதற்காகவும், அவரிடம் தங்கள் மனுவை தருவதற்காகவும் நிறைய பெண்கள் பல இடங்களில் ஆர்வத்தை வெளிப்படுத்தியது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

கவச உடை
அவ்வளவு ஏன், பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டிவந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில், தமிழகத்தில் தொற்றின் பரவல் தீவிரமாகிவிட்டது.. அப்போதுகூட கனிமொழி ஒதுங்கிவிடவில்லை.. கடைசி வரை திமுகவின் வெற்றிக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இறங்கி வேலை செய்து, இறுதியில் தொற்று பாதித்து, கவச உடையுடன் வந்து ஓட்டுப்போட வந்ததை தமிழகமே கண்டது..

பலம்
இப்படி ஆரம்பம் முதல் கடைசி நாள் வரை கனிமொழி திமுகவுக்காக எடுத்து கொண்ட சிரத்தைகள், ஓட்டு வங்கியை பலப்படுத்தி இருப்பதாகவும், தென்மண்டல பகுதி மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு இந்த முறை உயர்ந்துள்ளதற்கு அடித்தளமாக இருந்ததே கனிமொழிதான் என்று, ஸ்டாலினிடம் ஐபேக் டீம் தெரிவித்ததாம். இதையடுத்தே, கனிமொழிக்கு முக்கிய பதவியை தர ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஒன்று, தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி அல்லது கேஎன் நேரு வகித்து வரும் முதன்மை செயலாளர் பதவியை 2ஆக பிரித்து, தென்மண்டலங்களுக்கான முதன்மை செயலாளர் பதவியை கனிமொழிக்கு தர போவதாக கூறப்படுகிறது.

அழகிரி
தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு தரும்படி கடந்த வருடமே அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.. தேர்தலுக்கு முன்பே கனிமொழிக்கு இந்த பதவியை தந்தால், அது திமுகவுக்கு கூடுதல் பலத்தை உருவாக்கும், அமமுக, அதிமுகவின் செல்வாக்கை எளிதாக குறைத்து விடலாம் என்றும், அன்று கருணாநிதி இருந்தபோது அழகிரி எப்படி செயல்பட்டாரோ, அதுபோலவே தென்மண்டலத்தை தன் வசம் கனிமொழி கொண்டுவந்துவிடுவார் என்று வலியுறுத்தியபடியே வந்தனர்..

திமுக கொடி
ஆனாலும், அந்த சமயத்தில் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.. தற்போது ரிசல்ட் வர உள்ள நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படலாம் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.. அப்படி பதவி தரும்பட்சத்தில் கனிமொழிக்கு முக்கிய பொறுப்புகளை தராமல் இருந்துவிட முடியாது.. அதன்காரணமாகவும், அழகிரிக்கு ரீ-பிளேஸாக இந்த பதவியை தர திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.. எப்படியோ, லேட்டா தந்தாலும் லேட்டஸ்ட்டா தர போவதால், தென்மாவட்டங்களில் இனி திமுக கொடி கெத்தாகவே பறக்கும்.. பார்க்கலாம்...!












Click it and Unblock the Notifications