சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் மகன் அன்பழகன் கொரோனாவால் உயிரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்
சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியத்தின் இளையமகன் அன்பழகன் (வயது 34) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியத்துக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருந்தது. அதேபோல் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் மா. சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா உறுதியானது. இதனால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் இன்று உயிரிழந்தார். சென்னையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மா.சு.வு.க்கு இப்படி ஒரு சோதனையா? - ஸ்டாலின்
மா. சுப்பிரமணியன் மகன் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்:
அருமைச் சகோதரர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது. ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை - திரு. மா.சுப்பிரமணியன் அவர்களும், அவரது துணைவியார் திருமதி. காஞ்சனா சுப்பிரமணியன் அவர்களும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை கொரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.
மா.சு. இணையர்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா? செல்வன் அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.