தாம்பரத்தை தனி மாவட்டமாக உருவாக்குவோம்! என்னுடைய கடைசி பெரிய ஆசை இது! -எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.!
சென்னை: தாம்பரத்தை தனி மாவட்டமாக உருவாக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என திமுக சட்டசமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் என்பது ஒரு எம்.எல்.ஏ.வாக தனது கடைசி பெரிய ஆசை என அவர் உருக்கமுடன் பேசியிருக்கிறார்.
இதனிடையே சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் தாம்பரம் நாளுக்கு நாள் விறுவிறுவென அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவது கவனிக்கத்தக்கது.

தனி மாவட்டம்
தமிழகத்தில் பழனியையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஆசை தெரிவித்திருக்கிறார் தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. தங்களுக்கு சென்னையும் வேண்டாம், செங்கல்பட்டும் வேண்டாம் என பேசியுள்ள அவர் இந்த இரண்டு மாவட்டங்களில் இருந்தும் சில பகுதிகளை இணைத்து தாம்பரத்தை தனி மாவட்டம் ஆக்க வேண்டும் என பேசியிருக்கிறார்.

கடைசி பெரிய ஆசை
ஒரு எம்.எல்.ஏ.வாக தனது கடைசி பெரிய ஆசை எதுவென்று கேட்டால் தாம்பரத்தை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பது தான் எனக் கூறியுள்ளார். தாம்பரத்தை தனி மாவட்டமாக உருவாக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என்ற உறுதியை கொடுத்த அவர்,தாம்பரத்தை தனி மாவட்டமாக ஆக்குவது தான் தனது கடைசி பணியாக இருக்கும் என உருக்கமுடன் பேசினார். தாம்பரத்தை பொறுத்தவரை சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக திகழ்கிறது.

மக்கள் தொகை
தாம்பரத்தை பொறுத்தவரை மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகுகிறதே தவிர குறையவில்லை. அந்தளவுக்கு அங்கு அசுர வளர்ச்சி காணப்படுகிறது. சென்னை மாநகருக்குள் வீடு வாடகை அதிகம் என்பதால் பெரும்பாலானோர் தாம்பரம் பகுதியில் குடியிருந்து கொண்டு சென்னை மாநகருக்கு பணிக்கு சென்று வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் தாம்பரத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே கிளாம்பாக்கம் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் வரவுள்ளது.

முதல்வரிடம் கோரிக்கை
தாம்பரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா இது தொடர்பாக தனது கோரிக்கையை முதலமைச்சரிடம் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் இருந்து வரும் நிலையில் தாம்பரம் தனி மாவட்டம் ஆக்கப்பட்டால் மாவட்டங்களின் எண்ணிக்கை 39 ஆக உயரக்கூடும்.












Click it and Unblock the Notifications