"அவரை" கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.. புரமோஷன் கிடைத்த "ராஜா"வுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன டிப்ஸ்
மன்னார்குடி டிஆர்பி ராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் டிப்ஸ் தந்துள்ளார்
சென்னை: திமுகவின் ஐடி விங்குக்கு புதிய பொறுப்பில், டிஆர்பி ராஜா நியமிக்கப்படவும், அது தொடர்பான முக்கியமான விஷயத்தை முதல்வர் ஸ்டாலின் அவரிடம் தெரிவித்துள்ளாராம்..!
பிடிஆர்.. பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்.. வெளிநாடுகளுக்கு சென்று நிறைய படித்தவர்.. தமிழக நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டபோதே பெரிதும் பேசப்பட்டவர்..
சர்வதேச அளவில் நிதித்துறை குறித்த அனுபவம் உள்ளவர் என்பதால், அப்படிப்பட்ட பொருத்தமான நபரை நிதியமைச்சராக தேர்வு செய்ததற்கு ஸ்டாலினுக்கும் அன்றே பாராட்டுகள் குவிந்தன.

நிதித்துறை
நிதித்துறையை பொறுப்பை சிறப்பாகவே செய்து வருகிறார்.. அதுகுறித்து எந்த குறையும், விமர்சனமும் இதுவரை வந்ததில்லை.. அப்படியே வந்தாலும், வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று பேசி, புள்ளிவிவர தரவுகளுடன் எதிர்தரப்புக்கு பதிலடி தந்துவிடுவார்.. இது எதிர்நடவடிக்கை பல்வேறு தர்மசங்கடங்களையும் இழுத்து கொண்டு வந்துவிடும்.. ஒருகட்டத்தில் அவரை அழைத்த ஸ்டாலின், துறைரீதியான செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள், இந்த மாநிலத்தின் நிதி நிலைமை விரைவில் மாற வேண்டும் என்று கூட அறிவுறுத்தியதாக செய்திகள் வந்தன..

பிடிஆர் அமைதி
ஸ்டாலினின் அறிவுறுத்தலுக்கு பிறகு, பிடிஆர் அமைதி காத்து வருவதும் கவனிக்கத்தக்கது. அதேசமயத்தில், பிடிஆர் கட்சியில் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியில் சில சலசலப்புகள் எழுந்தன.. திடீரென தன்னுடைய ஐடி விங்குக்கு ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரனை கொண்டு வந்ததும், மநீமவிலிருந்து வந்த மகேந்திரனை ஐடி விங் இணைச் செயலாளராக்கியதும் என திமுகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பிடிஆரை அதிருப்திக்கு ஆளாக்கியதாகவும் கூறப்பட்டது.. இதனால், அவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது.

ஐடி விங்
தொடர்ந்து திமுக ஐடி விங் செயலாளர் பதவியை கைபற்ற பலரும் முனைப்பு காட்டி வந்த நிலையில், திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்... அப்போதுதான் பிடிஆரின் ராஜினாமா உறுதியானது.. இப்போதுதான் அடுத்த சிக்கலே ஆரம்பமாகி உள்ளது.. இந்த புதிய பதவி தனக்கு கிடைக்கும் என கோவை மகேந்திரன் எதிர்பார்த்திருந்தார் போலும்.. இணைச் செயலாளராக இருக்கும் அவரை செயலாளராக நியமிக்கவும் ஸ்டாலினுக்கும் விருப்பம் தான் போலும்..

இணை செயலாளர்
ஆனால், மகேந்திரனை நியமித்தால் , "மாற்று கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்குத்தான் முக்கிய அதிகார பதவிகளெல்லாம் கிடைக்கிறது என விமர்சனங்கள் வரும்" என்று சீனியர்கள் சிலர் ஸ்டாலினிடம் சொன்னார்களாம். ஏனெனில், 'அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்குத்தான், திமுகவில் பவர்ஃபுல் மினிஸ்டர்ஸ் ' என ஏற்கனவே கட்சிக்குள் அதிருப்தி இருந்து வருவதையும் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள்.. அதனால்தான் மகேந்திரனுக்கு அந்த வாய்ப்பு தர முடியாமல் போயுள்ளது..

உற்சாகம்
அதுமட்டுமல்ல, டிஆர் பாலுவின் விருப்பமும் டிஆர்பி ராஜாவின் நியமனத்தின் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது... ஆக மொத்தம் செக்ரட்டரி பதவி கிடைக்காததில் சோர்வடைந்திருக்கிறார் மகேந்திரன்... எனினும், மகேந்திரனை அரவணைத்து செல்ல வேண்டும் என்று டிஆர்பி ராஜாவிடம் சொல்லியுள்ளாராம் ஸ்டாலின்... இதன் மூலம் மகேந்திரனும் உற்சாகமாகி உள்ளார்.. பதவி கிடைத்த சந்தோஷத்தில் டிஆர்பி ராஜாவும் உற்சாகமாகி உள்ளார்..!












Click it and Unblock the Notifications