ஆபாச வீடியோ பதிவு.. திமுக நாளேடான முரசொலியின் பேஸ்புக் பக்கம் நீக்கம்.. ஹேக்கர்களால் வந்த சிக்கல்
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் முரசொலியின் அந்த பேஸ்புக் பக்கம் முகநூலில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக முரசொலி உள்ளது. இந்த நாளேட்டுக்கு சமூக வலைதளங்களில் தனியே பக்கங்கள் உள்ளன. மேலும் தினமும் வெளியாகும் செய்திகள் இந்த வலைதள பக்கங்களில் வெளியாகும்.

இதனை திமுகவை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் முரசொலியின் பேஸ்புக் பக்கம் திடீரென்று ஹேக்கர்களால் முடக்கம் செய்யப்பட்டது.
அதாவது கடந்த 6ம் தேதி முரசொலி நாளேட்டின் அதிகாரப்பூர்வ பக்கம் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டது. மேலும் அதில் ஆபாச வீடியோ, போட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதோடு இந்த பக்கத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்றால் 200 அமெரிக்க டாலர்களை பிட்காயின் முறையில் வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இதனால் முரசொலி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து முரசொலியின் பொது மேலாளர் ராஜசேகரன் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. முரசொலியின் பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை மீட்டு தர வேண்டும். அதோடு முடக்கம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது வரை முரசொலியின் பேஸ்புக் பக்கம் மீட்கப்படவில்லை. மேலும் ஹேக்கர்களையும் போலீசார் கண்டுப்பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் பேஸ்புக்கில் இருந்து முரசொலியின் அதிகாரப்பூர்வ பக்கம் திடீரென்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பேஸ்புக் பக்கத்தை யார் நீக்கி உள்ளனர்? என்பது தற்போது வரை தெரியவில்லை. அதாவது ஹேக்கர்கள் நீக்கம் செய்தனரா? அல்லது ஆபாச வீடியோ பதிவேற்றியதால் பேஸ்புக் நிர்வாகம் நீக்கியதா? இல்லாவிட்டால் விசாரணையின் ஒருபகுதியாகவும், ஆபாச வீடியோ பதிவேற்றுவதை தடுக்கும் வகையிலும் போலீசார் நீக்கம் செய்தார்களா? என்பது பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications