விசிக இல்லாமல் திமுக ஜெயிக்காது..வார்த்தையை விட்ட ஆதவ் அர்ஜுனா! திருமாவுக்கு தெரியுமா? ஆ.ராசா கேள்வி
சென்னை : விசிக இல்லாமல் திமுக ஜெயிக்காது என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை ஏற்க மாட்டார், ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா,” வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது எனது தலைவர் ஏன் துணை முதலமைச்சர் ஆக முடியாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கான அடித்தளம்.
கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வழிகாட்டுதலோடு எப்போதும் குரல் கொடுக்கும். அதிமுகவை பொறுத்தவரை அதனை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த தேர்தலில் திமுக 37 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் அதிமுகவோ 33 சதவீத வாக்குகளை பெற்றது. வரும் தேர்தலில் கூட்டணி, பிரச்சார வியூகங்களை வகுத்தால் வெற்றி பெரும். அந்தளவுக்கு அக்கட்சியின் அடிப்படை கட்டமைப்பு உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்தில் வெறும் 16 எம்பி தொகுதிகளை வென்ற போதும், நான்கு முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகளை கைப்பற்ற முடிந்தது. அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததாக கூறினாலும், அதன் வாக்கு வங்கி சரியில்லை. அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் அதே கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இங்கு யாருமே பெரிய கட்சி கிடையாது. தமிழகத்தில் நாங்கள் தான் பெரிய கட்சி என்று கூறுபவர்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா நின்றது போல தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று இருக்கலாம். கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக ஜெயித்து இருக்க முடியாது. திருமாவளவனுக்கு மட்டுமல்ல, கே பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோருக்கும் உரிய பொறுப்பும், பதவியும் கொடுக்க வேண்டும்" என பேசியுள்ளார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தான் திருமாவளவன் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஆதவ் அர்ஜுனாவின் பேட்டியை நானும் பார்த்தேன். திருமாவளவனை 40 ஆண்டுகளாக எனக்கு தெரியும். இருவரும் பல மேடைகளில் ஒன்றாக பேசியிருக்கிறோம். அவரது இடதுசாரி சிந்தனை இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் நானும் பெருமிதம் அடைகிறோம். சமூக நீதியை பாதுகாப்பதில் திமுகவுக்கு தோள் கொடுக்கும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. இடதுசாரி சிந்தனையில் இருந்து வழுவாமல் இருக்கும் அரசியல் தலைவர் திருமாவளவன் என்பதில் எனக்கு, எங்கள் கட்சிக்கோ எந்தவித கருத்தும் இல்லை. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிதாகச் சேர்ந்திருக்க ஒருவர் கொள்கை புரிதல் இன்றி பேசியிருக்கிறார்.
அது கூட்டணி அறத்திற்கும் அரசியல் அரணுக்கும் ஏற்புடையது இல்லை. திருமாவளவன் இந்த கருத்தை ஏற்க மாட்டார். அவரது ஒப்புதலோடு ஆதவ் அர்ஜுன் பேசியிருக்க மாட்டார் என்பது என்னுடைய எண்ணம். அல்லது ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தான் திருமாவளவன் எடுப்பார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications