அதிமுக -பாஜக கூட்டணி... கூடா நட்பு கேடாய் முடியும்... தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்
சென்னை: கூடா நட்பு கேடாய் முடியும் என்பது அதிமுக-பாஜக கூட்டணிக்கு பொருத்தமான பழமொழி என திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பாஜக திமுக இடையே தான் போட்டி என வி.பி.துரைசாமி கூறியிருப்பதை நினைத்தால் தனக்கு சிரிப்பு சிரிப்பாய் வருவதாக அவர் நகைத்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதியில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

மதவெறி கட்சியல்ல
திமுகவை பொறுத்தவரை அனைத்து மதத்தினரையும் சமமாக கருதக் கூடிய இயக்கம் என்றும் பாஜக மதவெறியை தூண்டுகிற கட்சி எனவும் தயாநிதிமாறன் கூறியுள்ளார். மதநல்லிணக்கத்தை விரும்பும் திமுகவோடு மதவெறியை தூண்டி அரசியல் செய்து வரும் பாஜக எப்படி போட்டி போட முடியும் என வினவினார்.

வி.பி.துரைசாமி
தமிழகத்தில் திமுக அதிமுக இடையே இருந்த போட்டி இப்போது திமுக பாஜக என மாறியுள்ளதாக வி.பி.துரைசாமி பேசியதை நினைத்தால், தனக்கு சிரிப்பு சிரிப்பாக வருவதாகவும் அவரது பேட்டி நகைப்புக்குரியது எனவும் தெரிவித்தார். அதிமுகவை வெற்றுவேட்டு என நாங்கள் சொல்லவில்லை, பாஜகவே கூறிவிட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

பழமொழி
கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழி பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவுக்கு மிகப் பொருத்தமானது என விமர்சித்த அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக அதிமுகவுக்கு வாழ்த்துகள் எனவும் தயாநிதிமாறன் எம்.பி. கூறியுள்ளார். முன்னதாக சென்னை துறைமுகம் தொகுதியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கினார்.

விவாதப் பொருள்
பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி நேற்று காலை கமலாலயத்தில் அளித்த பேட்டி, அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என அவர் தெரிவித்த கருத்து கடந்த இரண்டு நாட்களாக விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications