முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு.. திமுக எம்பி ரமேஷுக்கு ஜாமீன்!
சென்னை : முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான திமுக எம்.பி. ரமேஷுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய கோவிந்தராஜ் மகன் தொடுத்த வழக்கில் நவம்பர் 23ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாமக நிர்வாகி கொலை
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் கிராமத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷுக்கு சொந்தமாக முந்திரி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் செப்டம்பர் 19ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் பாமக நிர்வாகியும் கூட. இதையடுத்து தனது தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் அளித்த புகாரில் கோவிந்தராஜ் மரணம் கொலை வழக்காக பதியப்பட்டது.

எம்பி ரமேஷ் சரண்
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அக்டோபர் 11-ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி கடலூரில் சிறையில் அடைக்கப்பட்டார். கோவிந்தராஜின் மகன், தந்தை கொலையுண்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார்.

சிபிசிஐடி வசம் வழக்கு
இதையடுத்து கோவிந்தராஜ் கொலை சிபிசிஐடி விசாரிக்குமாறு தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த வழக்கு கூடுதல் துணை கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் சிபிசிஐடி போலீஸார் வசம் செப்டம்பர் 28 ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிபிசிஐடியினரும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜாமீன் கோரி மனு
இதற்கிடையே தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு ரமேஷ் கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டடதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் திமுக எம்.பி. ரமேஷ். ஆனால் இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லது தற்போதைய சிபிசிஐடி அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் கோவிந்தாராஜின் மகன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணை அதிகாரி மாற்றம்
இந்நிலையில் ரமேஷ் ஜாமீன் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, எந்த தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெறுவதாகவும், மாநில அரசே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

நிபந்தனை ஜாமீன்
மேலும் புலன் விசாரணை நியாயமாக நடக்கிறது எனவும், விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு விழுப்புரம் சிபிசிஐடி ஆய்வாளர் வழக்கை விசாரிப்பதாகவும் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கடலூர் திமுக எம்.பி. ரமேஷை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்றும் அவரது மகன் மீதான கோரிக்கை மீது நவம்பர் 23ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications