திமுக எம்.பி. கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி! வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை!
சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட கனிமொழி சோமு, தாமே மருத்துவர் என்பதால் உரிய மருந்துகளை உட்கொண்டு வருகிறார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக தன்னை சந்தித்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எப்படி நீங்கல்லாம் அதிகாரிகளாக இருக்கிறீர்கள்? தமிழ்த்தாய் வாழ்த்து விஷயத்தில் கனிமொழி நறுக் கேள்வி
மாநிலங்களவை உறுப்பினர்
திமுக மருத்துவர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சோமுவுக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் அதிக உடல் வலி இருந்திருக்கிறது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தாமே ஒரு மருத்துவர் என்பதால் கொரோனாவுக்கான மருந்துகளை முறைப்படி எடுத்துக்கொண்டு தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் கனிமொழி சோமு எம்.பி.
வேண்டுகோள்
இதனிடையே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், கடந்த இரண்டு நாட்களாக தன்னை நேரில் சந்தித்தவர்கள் தயவு செய்து கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா சோதனையில் அலட்சியம் வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர்கள்
அண்மையில் அமைச்சர்கள் முர்த்தி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது திமுக எம்.பி. ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி சோமு எம்.பி. சென்னையை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவலாகும்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
கொரோனா காரணமாக கனிமொழி சோமு எம்.பி. வரும் 31-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்திலும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.