அப்படித்தாங்க அரசியல் பண்ணுவோம்.. பொள்ளாச்சியை அதிர வைத்த கனிமொழி ஆவேசம்!
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கொடுமைகளுக்கு எதிராக பொங்கி தீர்த்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.
பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக போராடுவதற்கு கனிமொழியே நேரடியாக களத்திற்கு வருகிறார் என்ற விவரம் தெரிந்ததும் கோவை மண்டலமே சூடாகித்தான் போனது.
இந்த நிலையில்தான், தேர்தலை காரணம் காட்டி கனிமொழி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது.
வீடியோவாடா எடுக்கறீங்க வீடியோ.. போடு.. பொள்ளாச்சி காம கும்பலை சரமாரியாக தாக்கிய மக்கள்- வைரல் வீடியோ
ஆத்திரம், கோபம்
ஆனால் முன்வைத்த காலை பின் வைக்கவில்லை கனிமொழி. தடையை மீறியேனும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடித்தான் தீருவேன் என்று உறுதி காட்டினார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சுட்டெரிக்கும் வெயிலில் பொள்ளாச்சி போராட்ட களத்திற்குள் குதித்தார்.
வழக்கத்தை விடவும் இந்த போராட்டத்தின்போது, கனிமொழியின் குரலில் மிகுந்த ஆத்திரமும், உக்கிரமும் தென்பட்டது. அவர் ஆளும் கட்சியை மட்டுமின்றி காவல்துறையையும் கூட, தனது உரையின் போது விட்டுவைக்காமல் கடுமையாக விளாசினார்.
கிண்டலுடன் பதிலடி
கனிமொழியின் பேச்சில் கோபத்துடன், ஆளும் தரப்புக்கு எதிரான கிண்டல் தொனியும் வெளிப்பட்டது. "திமுகவினரை விடவும் காவல்துறையினர் அதிக அளவில் இங்கு குவிந்து உள்ளனர்" என்று அரசின் நெருக்கடி தொடர்பாக மறைமுகமாக குற்றம்சாட்டிய கனிமொழி அடுத்ததாக கூறிய வரிதான் முக்கியமானது. "காவல்துறையினர் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்தானே, அவர்களுக்கும் அந்த ஆத்திரம் இருக்கத்தானே செய்யும். எனவே நம்மோடு இணைந்து போராடுவதற்காக அவர்கள் வந்திருக்கக்கூடும்" என்றாரே பார்க்கலாம்.
காவல்துறைமீது சாடல்
டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்ணை கன்னத்தில் அறைந்து, அந்த பெண் காது கேட்காமல் போகும் அளவுக்கு செய்தவர் இப்போது கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி ஆக உள்ளார் என்றும், ஆனால் அவருக்குக் கீழே பணியாற்றக்கூடிய எல்லா போலீஸ்காரர்களும் அப்படியான மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்றும் சொன்னார் கனிமொழி.
அதிமுக பிரமுகர்
"அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் ஓட்டிச் சென்ற கார் மோதி, பெண் உயிரிழந்த சம்பவம் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். ஆனால் அது விபத்து தானா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது" என்று அடுத்த குண்டை தூக்கி வீசினார் கனிமொழி. அது மட்டுமல்ல, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 7 வருடங்களாக மர்மமான முறையில் உயிரிழந்த பெண்கள், மற்றும் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் குறித்த முழு தகவலையும் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தி, அதன் பின்னணியில் இந்தக் காமுகர்கள் இருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் சொன்னார்.
அப்படித்தாங்க செய்வோம்
"திமுக இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரை கூட திமுக உட்பட, அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவித்த பிறகுதான் பதிவு செய்துள்ளது காவல்துறை. அப்படியானால், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, அரசியல் செய்தால்தான் தீர்வு கிடைக்கும் என்பது தெரிந்துவிட்டது. எங்களுக்கு அரசியல் செய்வதில் விருப்பமில்லை. ஆனால், அரசியல் செய்தால் தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி விட்டதால், நாங்கள் அரசியல் செய்கிறோம்" என்று அழுத்தம் திருத்தமாக, திமுகவுக்கு எதிரான, விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் கனிமொழி.
எங்கே பெண் தலைவர்கள்
செய்தியாளர்களை ஒருமையில் பேசி 'வீரம் காண்பித்த' பிரேமலதாவாகட்டும், அல்லது பிற கட்சிகளில் உள்ள எந்த ஒரு குறிப்பிடத்தக்க பெண் தலைவர்களாகட்டும்.. பொள்ளாச்சி களத்திற்கு வந்து போய் அனல்வீசும் அளவுக்கு ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. அவ்வளவு ஏன், கண்டனம் கூட சத்தமாக தெரிவிக்கவில்லை. அந்த வகையில் திமுகவின் பெண் முகமாக அறியப்படும் கனிமொழி களத்திற்கு வந்து, புயல் வீசச் செய்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு
பெண்கள் பாதுகாப்பு விஷயம் என்பது சாமானிய மக்களால் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பார்க்க படக் கூடிய விஷயம். எனவேதான் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். காவல்துறைக்கு கடும் நடவடிக்கை எடுப்பதற்காக சுதந்திரங்களும் வழங்கியிருந்தார்.. அல்லது அது போன்ற ஒரு தோற்றத்தையாவது ஏற்படுத்தி இருந்தார். இதனால்தான் பெண்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அமோக ஆதரவு இருந்து வந்தது. இப்போது பெண்களின் பாதுகாவலராக கனிமொழி மக்களால் பார்க்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எது எப்படியோ.. பெண்கள், நாதியற்றவர்கள் இல்லை என்பதை களமிறங்கி காண்பித்த கனிமொழிக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.