அறநிலையத்துறை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து.. கருணாநிதி என்ன சொன்னார்? திமுக எம்பி மறைமுக விமர்சனம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் கருணாநிதியின் கருத்தை சுட்டிக்காட்டி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் விமர்சித்து இருக்கிறார்.
தருமபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர். தன்னுடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள், அரசியல் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
அதேபோல், பாஜக, அதிமுக, நாம் தமிழர் போன்ற எதிர்க்கட்சிகள் மீது பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் தருமபுரி செந்தில்குமார். இவரது ட்விட்டர் பதிவுகள் அரசியலில் விவாதப் பொருளாகவும் மாறி வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். தமிழ்நாட்டில் குறிப்பாக பொதுமக்கள் அல்லாது இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய இந்துத்துவ அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னெடுத்து செல்கின்றன.

தலைவர்கள் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், திமுக சார்பிலோ, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பிலோ விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி இருந்தார்.

அறநிலையத்துறை வாழ்த்து
ஆனால், தமிழ்நாடு அரசி இந்து சமய அறநிலையத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை தெரிவித்து இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அந்த பதிவில், விநாயகர் படத்துடன், "தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்." என்றும் குறிப்பிடப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபுவின் பெயர்கள் ஹேஷ்டேக்கில் பதிவிடப்பட்டு இருந்தன.

திமுக எம்.பி. செந்தில்குமார்
இதுகுறித்து தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல" என்ற கருணாநிதியின் கருத்தை குறிப்பிட்டு, "சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications